‛‛175 கோடி’’.. சர்ச்சைக்கு மத்தியில் சைலன்ட்டாக சாதித்த மகளிர் இலவச பேருந்து திட்டம்.. புதிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச அரசு பேருந்து திட்டம் சர்ச்சைகளுக்கு மத்தியில் சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கடந்த ஆண்டு ஆட்சியை பிடித்தது. முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் முதற்கட்டமாக மக்களுக்காக 5 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதில் ஒன்று தான் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டமாகும். இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே 7ல் அரசாணை வெளியிடப்பட்டது.
வடகிழக்கு பருவமழை..சில வாரங்களில் ஜோராக தொடங்கும்..சமாளிக்க தயாராகும் அரசு..என்னென்ன ஏற்பாடுகள்
இலவச பேருந்து திட்டம்
இதையடுத்து கடந்த ஆண்டு மே 8 முதல் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதனால் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் மகளிர் அன்றாடம் பேருந்துக்காக செலவு செய்யும் தொகையை மிச்சம் பிடித்தனர்.
விவாதத்துக்குள்ளான திட்டம்
இதற்கிடையே தான் சமீபத்தில் இந்த திட்டம் கடும் விவாதத்துக்கு உள்ளானது. இந்த திட்டம் தொடர்பாக திமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‛ஓசி' என கூறியது சர்ச்சையானது. இதையடுத்து அமைச்சருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. பெண்களை இழிவுப்படுத்தியதாக பொன்முடியை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சாடினர்.
பிடிவாதம் பிடித்த மூதாட்டி
அதோடு, கோவையில் மூதாட்டி துளசியம்மாள் இலவச பேருந்தில் ஓசியாக போகமாட்டேன் எனக்கூறி கண்டக்டரிடம் பிடிவாதம் பிடித்த வீடியோவும் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரத்தில் மூதாட்டியை வைத்து டிராமா செய்ததாக கூறி அதிமுகவின் ஐடி விங்கை பிருத்திவ்ராஜ் (40), மதிவாணன் (33), விஜயானந்த் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
175 கோடி மகளிர் பயணம்
இந்நிலையில் தான் தற்போது இலவச பேருந்து திட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக அரசின் மகளிர் இலவச பேருந்து திட்டத்தில் கடந்த ஆண்டு மே 7 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 176 கோடியே 84 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு எவ்வளவு பேர்?
அதன்படி நாள் ஒன்றுக்கு 39 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் இலவச பயண திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும் இலவச பேருந்து திட்டத்தில் 10 லட்சம் முறை திருநங்கைகளும், 1 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரம் முறை மாற்றுத்திறனாளிகளும் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.