அப்பாடா.. கோடை வெயிலுக்கு பிரேக்.. சரவெடியாக வரும் மழை! எந்த 19 மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில், அதைக் குளிர்விக்கும் வகையில் அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே வெப்பம் சதமடித்து வந்த நிலையில், இப்போது வெப்பத்தின் தாக்கம் மேலும் மோசமாகியுள்ளது.
பல இடங்களில் வெப்பம் தொடர்ந்து சதமடித்து வருகிறது. அதிகபட்சமாகச் சமீபத்தில் கரூர் பரமத்தியில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வானிலை: இதனிடையே கோடை வெயிலில் இருந்து மக்களைச் சற்று தப்பிக்க வைக்கும் வகையில் கடந்த இரு நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாகவே மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, கொமுகி அணையில் 130 மிமீ மழையும்,, வால்பாறை மோகனுரில் 60 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே வானிலை மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் வரும் நாட்களில் கணிசமான இடங்களில் மழை பெய்ய உள்ளது.

மழை: இன்று (ஏப்ரல் 23) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (ஏப்ரல் 23) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாகச் சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications