திமுக ஜெயித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு.. செல்வப்பெருந்தகை போடும் கணக்கு!
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மே 4 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. 4 முனை போட்டி நிலவும் நிலையில் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது உச்சபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் என பூடகமாகப் பேசி இருக்கிறார் செல்வப்பெருந்தகை.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து வரும் நிலையில், கொடைக்கானல் சென்றுள்ள செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திமுக - காங்கிரஸ் பிணக்கு?
அப்போது செல்வப்பெருந்தகையிடம், தேர்தல் பரப்புரையில் ஒரே மேடையில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துக் கொள்ளாதது சர்ச்சையாக மாறியுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "அது சர்ச்சையும் கிடையாது, திட்டமிடுதலும் கிடையாது. 5 மாநில தேர்தல் நடைபெற்றது. ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் ராகுல் காந்திக்கு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பார் என்பது தெரியும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் போட்டி என இருப்பது மேற்கு வங்கமும், அசாமும் தான். கேரளாவிலும் நாங்கள் ஆட்சியமைக்கப் போகிறோம்.
சோனியா வருவார்
அங்கு முன்பு ராகுல் காந்தியும், இப்போது பிரியங்காயும் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் அப்படி தேவையில்லை. எல்லாருக்கும் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது தெரியும். ராகுல் காந்தியுடன் நான் ஹெலிகாப்டரில் சென்றபோது பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, நீங்கள் எல்லாரையும் மிரட்டி விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினை விலைக்கு வாங்க முடியாது. அவர் தமிழ்நாட்டின் குரலாக தலை நிமிர்ந்து நிற்பதாக தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதலமைச்சர் ஸ்டாலினின் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கொரு திசையில் பரப்புரை மேற்கொண்டார்கள். இன்னும் வெகு விரைவில் பதவியேற்பு விழா இருக்கிறது. அதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
ராகுல் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீது எந்தவொரு கோபமும் இல்லை. அப்படி இருந்தால் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என ராகுல் காந்தி எப்படி சொல்லியிருப்பார் சொல்லுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
200+ சீட் உறுதி
மேலும் பேசிய செல்வப்பெருந்தகை, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். முதல்வரின் 5 ஆண்டுகள் அயராத உழைப்புக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவரது திட்டங்களுக்கு பரிசாக அதிக வாக்குப்பதிவு கிடைத்துள்ளது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெறும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார்.
உளவுத்துறை அறிக்கையின்படி என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? என்று வீடியோ ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பியுள்ளேன். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் இது போன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது. பாஜக, அதிமுக கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மத்திய அரசு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது என்பது தெரியவரும்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கூட
எஸ்.ஐ.ஆர் சீரமைப்பு காரணமாக வாக்கு சதவீதம் உயர்ந்தது போல கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது. யாருக்காகவும் வாக்கு சதவீதம் உயரவில்லை. அதிமுகவுக்கு வருகிற தேர்தலில் 28 இடங்கள் கூட கிடைக்காது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் கூட அமர முடியாது." என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சட்டப்பேரவைகளில், ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்ற கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுகிறது. மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 10% இடங்களை பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 எம்.எல்.ஏக்களை பெறும் கட்சிக்கே சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்கும்.
எதிர்க்கட்சி அந்தஸ்து
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. அதேசமயம், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 இடங்களை வென்ற தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
அந்தவகையில், இந்த முறை, அதிமுக 28 இடங்களில் கூட வெல்ல முடியாது என்றும், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் கூட அமர முடியாது என்றும் கூறி இருக்கிறார் செல்வப்பெருந்தகை. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக சீட்களில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, 24க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் என்ற தனது விருப்பத்தை செல்வப்பெருந்தகை வெளிப்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications