தாமரை மலருமா? மலராதா?.. டென்ஷனில் டெல்லி.. தமிழக தலைமைக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு
தமிழகத்தில் பாஜக மலர அமித்ஷா புது திட்டங்களை வகுத்து வருகிறார்.
Recommended Video

சென்னை: இப்போது டெல்லியின் இரு பெரும் தேசிய கட்சிகளின் கண்களும் தமிழகத்தின் மீதுதான் உள்ளது. தாமரை மலர்ந்தே தீர வேண்டும் என்பது போய் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார் அமித்ஷா!!
தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்துக்கு நேரம் முடிந்துவிட்டது. இனி இப்படியே விட்டால் மலராது என்ற பாஜக தலைமை முடிவுக்கு வந்துவிட்டது போலும்.
அதனால் புதுப்புது வியூகங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை தூக்கி நிறுத்த அமித்ஷா நம்புவது 3 விஷயங்களைதான்.

இரட்டை இலை
முதலாவதாக, அதிமுகவுடனான கூட்டணி. அதிமுக மீது மக்கள் எந்த அளவுக்கு அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பாஜக இன்னமும் உள்ளதா என தெரியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு இப்போது இருக்கும் ஒரே பலம் இரட்டை இலை என்ற ஒரே "பிராண்டு"தான்.

மர்ம மரணங்கள்
சர்ச்சைகள், ஊழல் வழக்குகள், ஜெ.மரண விசாரணை மர்மங்கள், கொடநாடு மர்ம விவகாரம் போன்றவற்றை பார்த்து ஏற்கனவே நொந்து போய் உள்ள மக்களுடன், ஏற்கனவே நோட்டா இழந்த பாஜக இணைய முயற்சி செய்வது வீணான விஷயமாகத்தான் இருக்கும்.

பலமான கூட்டணி
இரண்டாவதாக, திமுக கூட்டணியை உடைப்பது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை. ஏற்கனவே திமுக-காங்கிரஸ் பலமான கூட்டணியாக உருவான நிலையில், புதிய கூட்டு தலைமையே இப்போது உருவாகி உள்ளது. திமுகவுடன் மேலும் கூட்டணி வைக்க விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லீம் கட்சிகள் என வரிசை கட்டி நிற்க, பாஜகவுக்கு இப்படி சொல்லிக் கொள்ளும்படியான கட்சிகள் கூட்டணியில் இல்லை என்பதே உண்மை.

அழகிரிக்கு அழைப்பு?
அதனால் திமுக கூட்டணியை உடைப்பது எளிதான காரியமாக பாஜகவுக்கு இருக்குமா என தெரியவில்லை. அழகிரியை தன்னுடன் அழைத்து கொள்ளலாம் என எப்படி காய் நகர்த்தினாலும், அழகிரிக்கு திமுகவை விட்டு வர மாட்டார், அப்படியே வந்தாலும் பாஜகவில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காது என்பதை அவர் நன்கு அறிந்தே வைத்திருப்பார்.

பரிதாப உணர்வு
மூன்றாவதாக, ரஜினியை வைத்து பாஜகவை வளர்ப்பது. 20 வருடத்திற்கு முன்பு அல்லது 10 வருடத்திற்கு முன்பு ரஜினிக்கு இருந்த ஆதரவும், செல்வாக்கும் இப்போதும் இருப்பதுபோலவே பாஜக நினைத்து கொண்டிருப்பது பரிதாபத்தைதான் தருகிறது. ரஜினி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் முற்றிலும் மக்களிடம் சிதைந்துவிட்டது.

டேமேஜ் இமேஜ்
ஒவ்வொரு முறையும் படம் வெளியாவதற்கான ரஜினியின் சந்தர்ப்பவாத பேட்டியையும், ரசிகர்களை என்றைக்காவது தொண்டர்களாக மாற்றி வைத்து கொள்ள வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வையும் மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். ரஜினி மீதான இமேஜ் "டேமேஜ்" ஆக காரணம் ரஜினியேதான்.. வேறு யாருமில்லை. அப்படி இருக்கும்போது இன்னமும் ரஜினியை பாஜக நம்புவது எதனால் என்று தெரியவில்லை.
எப்படி உருண்டு, புரண்டு பார்த்தாலும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும் என்ற அமித்ஷாவின் வியூகம் பலிக்குமா.. பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications