ஆணி அடித்தது போல் ஸ்ட்ராங்கா விஜய்.. முட்டு கொடுத்த அதிமுக! வண்டியை விடும் டெல்லி.. ஷா கணக்கு என்ன?
சென்னை: தமிழக அரசியலில் தற்போது உருவாகியுள்ள பரபரப்பான சூழ்நிலையை மையமாக வைத்து பல்வேறு அரசியல் யூகங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 'டெல்லி' தனது பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் காலங்களில், அமலாக்த்துறை 'வண்டி' அடிக்கடி தமிழகத்தின் பக்கம் திரும்பலாம் எனவும், அமித் ஷாவின் திட்டமே அதுதான் என்கின்றனர் டெல்லி வட்டாரத்தினர்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் அரசுக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தது அரசியல் ரீதியாக அதிமுக மிகப் பெரிய சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் மற்றும் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பின் ஆதரவு, பாஜகவின் திட்டத்தை முற்றிலும் மாற்றியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பி இருந்த தவெக அரசு தற்போது அதிக அரசியல் தன்னம்பிக்கையுடன் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், "இது 'டெல்லி'போட்ட திட்டத்தின் ஒரு பகுதியா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக அரசியல்
குறிப்பாக, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மணல் குவாரி முறைகேடு, டெண்டர் சர்ச்சை, பணமோசடி குற்றச்சாட்டுகள் போன்ற விவகாரங்கள் மீண்டும் விசாரணைக்கு வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய அமலாக்கத்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் தமிழக அரசியல் நகர்வுகளை தீவிரமாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை மத்திய அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக எந்த பெரிய நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றம்
அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக பார்க்க முடியாது என்றும் அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து பழைய ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் உண்மை தான் என்ற கருத்தும் நிலவுகிறது.
அமித் ஷா
குறிப்பாக திமுகவின் முக்கிய தலைவர்கள் மீதான பழைய வழக்குகளின் விசாரணை மீண்டும் வேகமெடுக்கும் என்ற தகவலும் உலாவுகிறது. இது தான் அமித் ஷா போட்டியிருக்கும் திட்டம் என்கின்றனர். மறுபுறம், விஜய் தலைமையிலான அரசு "ஊழலற்ற ஆட்சி" என்ற அரசியல் அடையாளத்தை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.
அதிமுக பிளவு
அதேநேரத்தில், தமிழக அரசியலில் தற்போது உருவாகியுள்ள இன்னொரு பெரிய மாற்றம் அதிமுகவின் உள்கட்சி பிளவாகும். எடப்பாடி பழனிசாமி ஒரு தரப்பிலும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் மற்றொரு தரப்பிலும் பிரிந்து செயல்படுவது, எதிர்க்கட்சி அரசியலையே பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, "தமிழகத்தில் தற்போது முக்கிய அரசியல் போட்டி தவெக மற்றும் திமுக இடையே மட்டுமே உருவாகும் சூழல் உருவாகிறதா?" என்ற கேள்வியை எழ வைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் பேசும் திறனும் குறைந்துள்ளதாக சிலர் மதிப்பிடுகின்றனர்.
திமுகவின் எதிர் தாக்குதல்
ஆனால் தமிழக அரசியலில் சூழ்நிலைகள் மிக வேகமாக மாறக்கூடியவை என்பதால், தற்போதைய நிலைமையே இறுதி அரசியல் படம் என்று கூற முடியாது. மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள், நீதிமன்ற தீர்ப்புகள், கூட்டணி அரசியல், அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வு, திமுகவின் எதிர் தாக்குதல் ஆகியவை தமிழக அரசியலை அடுத்த சில மாதங்களில் முழுமையாக மாற்றக் கூடும். இதனால், "டெல்லி" தமிழக அரசியலில் புயலைக் கிளப்ப தொடங்கிவிட்டதா? என்ற கேள்வி சற்று பலமாகே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications