இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போய்விடும்- அமித்ஷா
காரைக்கால்: இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளன.
அந்த வகையில் பாஜக சார்பில் நியமிக்கப்பட்ட தமிழக பொறுப்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விழுப்புரம், புதுவையில் பிரச்சார பொதுக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமித்ஷா இன்று அதிகாலை சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
எந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்?
பாஜக ஆட்சி
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் புதுவையில் உள்ள காரைக்காலுக்கு சென்றார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா பேசுகையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த மண் புதுச்சேரி. புதுச்சேரியில் வரும் தேர்தலில் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும்.
புதுவை
இந்தியாவின் முன்னோடி மாநிலமாக புதுச்சேரியை உருவாக்க பிரதமர் மோடி திட்டமிட்டார். புதுச்சேரிக்கான நூற்றுக்கணக்கான திட்டங்களை முதல்வராக இருந்த நாராயணசாமிதான் தடுத்தார். மக்கள் ஒரு முறை வாய்ப்பளித்தால் புதுச்சேரியை மிக சிறந்த மாநிலமாக உருவாக்குவோம்.
நம்பிக்கை இல்லை
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்துவிட்டது. புதுவை காங். தலைவர்கள் இப்போது பாஜகவில் இணைந்துவிட்டனர். ராகுல் காந்தியிடமே பொய் சொன்னவர்தான் நாராயணசாமி. நாராயணசாமி மீது நம்பிக்கை இல்லாமல் காங். தலைவர்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர்.
பாஜக நோக்கி
உலகத்திலேயே நன்றாக பொய் சொல்லக் கூடியவர் என்கிற விருது நாராயணசாமிக்குதான் கொடுக்க வேண்டும். டெல்லியில் இருக்கும் காந்தி குடும்பத்தின் நலனுக்காக மட்டும் செயல்பட்டவர் நாராயணசாமி. ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்தும் காங்கிரஸ் விரைவில் காணாமல் போய்விடும். காங்கிரஸில் குடும்ப ஆட்சி நடைபெறுவதால் பாஜகவை நோக்கி வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளர்
நமச்சிவாயம்தான் முதல்வர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் சொன்னவர் நாராயணசாமி. காந்தி குடும்பத்தின் காலை பிடித்து முதல்வராகிவிட்டார் நாராயணசாமி. நாராயணசாமி ஊழலை மட்டுமே சரியாக செய்திருக்கிறார். புதுச்சேரிக்கு ரூ15,000 கோடி நிதி உதவி கொடுத்தது மத்திய அரசு - அது வந்து சேர்ந்ததா? புதுச்சேரிக்கு கொடுத்த ரூ15,000 கோடி நிதியை சோனியா காந்தி குடும்பத்துக்கு திருப்பிவிட்டார் நாராயணசாமி.
நிதி ஒதுக்கீடு
எஸ்சி, எஸ்டி மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் கூட நாராயணசாமி விட்டுவைக்கவில்லை. புதுச்சேரியில் 75% இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு காங். அரசுதான் காரணம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார். விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் இன்று இரவே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.