அமித்ஷாவின் டிசம்பர் ஸ்கெட்ச்.. டிடிவி தினகரன் கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த பாஜக பலமான கூட்டணியை அமைக்கும் பணியில் உள்ளது. தற்போதைக்கு அதிமுக பாஜக, அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். பாஜகவை மலை போல நம்பி செயல்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். அவரை மீண்டும் கூட்டணிக்கு இழுத்துவரும் அஸைன்மென்ட் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தினகரன், அமித்ஷாவின் திட்டம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கவுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், அவர்களின் கூட்டணியை பலப்படுத்த டெல்லி பாஜக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அப்டேட்டை டிடிவி தினகரன் வழங்கியுள்ளார்.

எல்லாம் டெல்லி கையில்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஓபிஎஸ், நானும் தேவை ஏற்படும்போது பேசிக் கொள்வோம். டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் தான் அவரிடம் பேசி கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும். அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். அதைப்பற்றி எதுவும் நான் பேசவில்லை.
இதுவரை அவரிடம் யாரும் பேசவில்லை என்று நேற்று காலை என்னிடம் பேசியபோது அவர் சொன்னார். ஊடகங்களில் தவறான செய்தி வருகிறது. பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை பார்க்க அழைப்பு வந்ததாகவும், அதை நான் மறுத்ததாகவும் வரும் செய்தி பொய் என்று ஓபிஎஸ் கூறினார். இதுவரை அவரை யாரும் தொடர்பு கொண்டதாக தெரியவில்லை.
அமித்ஷா திட்டம்
2026 தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வியடைவீர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எனக்கு தெரிந்தவரை 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்று டெல்லியில் உள்ள முக்கியமான தலைவர்கள் என்னிடம் பேசினார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். டிசம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். எல்லாம் சரியாக வரும் என அவர் நினைக்கிறார். நாங்கள் அதிமுகவில் சேர்வது பற்றி என்றைக்கும் பேசவில்லை. ஊடகங்களில் தான் அப்படி தவறான செய்தி வருகிறது.
கூட்டணி விளக்கம்
அதிமுகவை மீட்பது வேறு, அதிமுகவில் சேர்வது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். அம்மாவின் தொண்டர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். இது சரியாகவில்லை என்றால், அதற்கான மாற்று முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.
திருமாவளவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவர் மறைந்தாலும் என்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்து சரித்திர சாதனை படைத்துள்ளனர். தவறாக பேசிவிட்டோம் என்பதை அவரே உணர்ந்துவிட்டார். மறைந்த தலைவர்களை பற்றி பேசும்போது அவர் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் அதற்கான எதிர்வினையை சந்திக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications