"மத்திய அரசை குறை சொல்லாதீங்க.. அது தமிழக அரசின் கடமை!" அட்டாக் மோடில் டிடிவி தினகரன்.. என்னாச்சு
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக அரசை சாடியுள்ளார்,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த மின் தடை காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் இரவு நேரங்களில் மாணவர்களால் படிக்கக் கூட முடிவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமிழக அரசின் கடமை
இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் திமுக அரசை சாடி வருகின்றன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "மத்திய தொகுப்பில் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதைக் கூறுவதை விட்டு தமிழக அரசு தீர்வு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டை மின் வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இரட்டை இலை வழக்கு
இரட்டை இலை தொடர்பான விசாரணைக்காக அடுத்த கட்ட சம்மன் எதுவும் அனுப்பியதாகத் தெரியவில்லை. கொடநாடு சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரிடம் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துக் கேட்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்- ஒழுங்கு மோசமாகத் தான் இருக்கும். திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி மீதே தாக்குதல் நடந்து உள்ளது என்றால் காவல் துறை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் விளக்கம்
முன்னதாக மின் தடை தொடர்பாக நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில், அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். மத்திய தொகுப்பிலிருந்து மின் விநியோகம் தடைப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி, இதைச் சீர் செய்யத் தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடம் கூடுதலான மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது, மாநில மின் உற்பத்தியையும் அதிகரிப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஈபிஎஸ் தாக்கு
இருப்பினும், அதிமுகவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர். கோடைக் காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சாடிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சார உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றும் இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சாடியிருந்தார்.












Click it and Unblock the Notifications