திமுகவுக்கு தாவினார் அமமுக புதுக்கோட்டை மா.செ. பரணி கார்த்திக்!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான பரணி கார்த்திக் இன்று திமுகவில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் தினகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தார். அமமுகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுக, அதிமுக என தொடர்ந்து தாவி வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு திமுகவில் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கலைராஜனுக்கு மாநில இலக்கிய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க தமிழ்ச்செலனுக்கு திமுகவின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவினரையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தமிழகத்தை தாக்க வருகிறது 'தாமரை புயல்'.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ?
தற்போது அமமுகவின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான பரணி கார்த்திக் திமுகவுக்கு தாவியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரணி கார்த்திக் அக்கட்சியில் இன்று இணைந்தார்.
அதிமுகவின் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வான ரத்தினசபாபதியின் சகோதரர்தான் பரணி கார்த்திக். ரத்தினசபாபதி தினகரன் ஆதரவாளராக இருந்தவர். பின்னர் கட்சி தாவல் நடவடிக்கை பாயலாம் என்பதால் அணி மாறியவர்.
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பரணி கார்த்திக், இருளில் உள்ள தமிழகத்துக்கு ஒளிவிளக்கு ஏற்றுபவர் ஸ்டாலின் என்பதால் அவரது தலைமையை ஏற்று திமுகவில் இணைந்தோம் என்றார்.