செந்தில்பாலாஜியின் சுபாவம் அப்படி! திமுகவில் தங்கமாட்டார்! அடித்து ஆருடம் சொல்லும் டிடிவி தினகரன்!
சென்னை: அதிபுத்திசாலித்தனம் என்றைக்குமே ஆபத்து என்றும் செந்தில்பாலாஜி திமுகவில் தங்கமாட்டார் எனவும் ஆருடம் கூறியிருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
செந்தில்பாலாஜியை பற்றி தனக்கு முழுமையாக தெரியும் என்பதால் இதை கூறுவதாகவும் 24 மணி நேரமும் அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர் அவர் எனவும் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அமமுக செயற்குழுவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு நிர்வாகிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தினகரன் பேசினார்.
அந்த வகையில் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியான போது, தனது கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், என்னண்ணே செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டார் என தன்னிடம் கேட்டதாகவும், அப்போதே போன வேலையை முடித்துக்கொண்டு வெளியேறிவிடுவார் என தாம் கூறியதாகவும் தெரிவித்தார்.
செந்தில்பாலாஜியை பொறுத்தவரை துருதுருவென இருப்பார் என்றும் ஆனால் அவர் திமுகவில் தங்கமாட்டார் என அப்போதே தாம் கணித்துக் கூறிவிட்டதாகவும் அது தான் நடக்கப் போகிறது எனவும் தினகரன் தெரிவித்தார். எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்தால் இது தான் நிலைமை எனக் கூறினார்.
இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது செந்தில்பாலாஜிக்கு கரூர் தொகுதியில் சீட் கொடுக்கலாம் என ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்ததே டிடிவி தினகரன் என்பது கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications