கண்களை கட்டி காட்டில் விட்டது போல்... ஆட்சியாளர்கள் தத்தளிக்கின்றனர் -டிடிவி தினகரன் சாடல்
சென்னை: கொரோனா விவகாரத்தில் கண்களை கட்டி காட்டில் விட்டது போல் தமிழக அரசு தத்தளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொள்முதல் செய்க
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையான மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

விட்டமின் மாத்திரைகள்
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் சாப்பிட வேண்டிய VITAMIN C, ZINC போன்ற மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. இன்னும் சில இடங்களில் காலாவதியான மாத்திரைகள் அரசு சார்பில் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

அலட்சியம்
பொது இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பதால் பலன் ஏதுமில்லை' என்று உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்ட பிறகும், விழுந்து விழுந்து மருந்து அடிக்கும் இந்த ஆட்சியாளர்கள், தேவையான மாத்திரைகளைப் போதுமான அளவுக்கு வாங்காமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. நோயின் பாதிப்பு அடுத்தடுத்து அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ரயில்பெட்டிகள்
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியைப் போன்று ரயில்பெட்டிகளைத் தயார் செய்யும் பணியிலும் பழனிசாமி அரசு அக்கறைகாட்டவில்லை. இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ பேரிடரை முழுமையாக எதிர்கொள்வதற்கான செயல்திட்டமோ இல்லாமல் ஆட்சியாளர்கள் தத்தளிப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது. பொதுமுடக்கத்தை தாண்டி அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளை உடனடியாக செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications