ஒன்னு ரெண்டு இல்லீங்க.. மொத்தம் "50 எம்எல்ஏக்கள்".. பாத்துட்டே இருங்க.. பரபரப்பை கிளப்பும் அமமுக!
சசிகலாவை வரவேற்க தயாராகிறார்கள் சில எம்எல்ஏக்கள்
சென்னை: "50 எம்எல்ஏக்கள் ரெடியா இருக்காங்க.. சில அமைச்சர்களும் தயாராகிட்டாங்க.. சசிகலா வரும் அன்று இவர்கள் திரண்டு வந்து வரவேற்பு சொல்லுவாங்க.. பார்த்துட்டே இருங்க.." என்று பூரிப்புடன் சொல்கிறார்கள் அமமுகவினர்..!
ரிலீசுக்கு பிறகு, சசிகலா இன்னும் ஒருவார்த்தைகூட பேச ஆரம்பிக்கவில்லை.. அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால், அதற்கு முன்பே அரசியல் அதிர்வுகள் காணப்பட்டு வருகின்றன.
அமமுக - அதிமுக இணையும்என்கிறார்கள்.. இன்னொரு பக்கம் சட்டசிக்கலை முன்வைத்து சசிகலாவின் நகர்வுகள் உள்ளன.. இதனிடையே 7-ம் தேதி அவர் சென்னைக்கு வர போகிறார்.. இதனால், அரசியல் களம் எப்படி இருக்க போகிறது? என்பது குறித்து ஒருசில அமமுகவினரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:
ஆதரவு
"சசிகலாவுக்கு ஆதரவுகள் கண்ணெதிரே பெருகி கொண்டே போகிறது.. அதை இனி மாத்த முடியாது.. சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி செல்லும்போது 2 மெசேஜ் சொல்லி உள்ளார்.. ஒன்று, அதிமுக கொடியை கட்டியதால், தான் அமமுகவில் கிடையாது என்று சொல்கிறார்.. மற்றொன்று, ஜெயலலிதாவின் காரில் சென்றதால், அவரது நேரடி அரசியல் வாரிசு தான் மட்டுமே என்பதை உணர்த்துகிறார்.
பொதுச்செயலாளர்
சசிகலா அதிமுகவில் உறுப்பினரே இல்லையென்றால், அவரை பொதுச்செயலாளராக ஏன் பதவியில் உட்கார வைக்க வேண்டும்? உறுப்பினர் இல்லாமல் எப்படி ஒருத்தர் பொதுச்செயலாளராக முடியும்? இன்னொன்று, சசிகலா ஜெயலலிதாவுக்காக ஜெயிலுக்கு போயுள்ளார்.. ஏ2 குற்றவாளிதான் இவர்.. 4 வருடம் அம்மாவுக்காக சிறை சென்றதால்தான், கொரோனா வரை அவதிக்குள்ளானதால்தான், ஒரு தவ வாழ்வு வாழ்ந்ததாக கோகுல இந்திரா சொல்கிறார்.
கேபி முனுசாமி
இன்னைக்கு போஸ்டர் அடித்து ஓட்டுபவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள்.. ஆனால், இதுபோல் எத்தனை பேரை நீக்க முடியும்? சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் என்றால் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம்.. அவ்வளவுதானே.. இந்த 4 பேர் தவிர வேறு யாரும் ஏன் வாய் திறக்கவில்லை? கட்சிக்கு தலைவர் ஓபிஎஸ்தானே? அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? கட்சியில் 100 சதவீதம் சேர்க்க வாய்ப்பில்லை என்று நேற்று ஜெயக்குமார் சொல்கிறாரே, என்ன அடிப்படையில் சொல்கிறார்? கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று ஓபிஎஸ்தானே சொல்ல வேண்டும்?
வருத்தம்
எடப்பாடியார் 4 வருடத்தில் நிறைய நல்லது செய்திருக்கிறார்.. மறுக்கவில்லை.. சொந்தமாகவே நின்று தன் திறமையை காட்டி உள்ளார்.. அதையும் மறுக்கவில்லை.. ஆனால், பதவியில் உட்கார வைத்துவிட்டு நம்பிக்கையுடன் சிறை சென்றால், இப்படி அபகரிப்பதும், அவருக்கு எதிராக பேசுவதும்தான் வருத்தமாக இருக்கிறது. டிடிவி தினகரனை பொறுத்தவரை, திமுகதான் எதிரி என்கிறார்.. இதுதான் சரியான பேச்சு.. உண்மையான அதிமுக தொண்டனின் மனக்குமுறலும், டார்கெட்டும் திமுகவாகத்தான் இருக்கும்.
திமுக
அம்மாவின் ஆட்சி சிதைந்து போகாமல் இருக்க வேண்டுமானால், திமுகவை வீழ்த்தவேண்டுமானால், எல்லாரும் ஒன்று சேரலாம் என்று அவர் எடுக்கும் முயற்சிகள் தவறு கிடையாது.. மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலிப்போம் என்கிறாரே கேபி முனுசாமி? டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? இரட்டை இலையை முடக்குவோம் என்று சொன்னது யார்? இரட்டை இலையை முடக்குவோம் என்பது சரியா? இரட்டை இலையை மீட்க பணம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு சரியா? டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
சசிகலா
இப்போதே அதிமுகவில் 50 எம்எல்ஏக்களும், சில அமைச்சர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தர தயாராகி விட்டார்கள்.. சசிகலா 7-ம்தேதி வரும்போது இவர்கள் மறைமுகமாக அல்லது நேரடியாகவே ஆதரவை தரலாம்.. அனைவரின் நோக்கமும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், கட்சிகள் இணைவதில் தவறேதும் இல்லை" என்றனர்.