முக்கிய தலையை தட்டித் தூக்கிய எடப்பாடி பழனிசாமி.. தினகரனுக்கு ஷாக் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ!
சென்னை: அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான உசிலம்பட்டி மகேந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர் உசிலம்பட்டி மகேந்திரன். 2006 சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருந்தார். இவர் ஜெயலாலிதா மறைவிற்குப் பின் கட்சியில் ஏற்பட்ட பிளவால் டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கிய நிலையில் அக்கட்சியில் இணைந்தார். அமமுகவின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்தார் மகேந்திரன்.

மேலும், அமமுக மதுரை மாநகர் புறநகர் மாவட்ட செயலாளராகவும், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார் மகேந்திரன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன் அமமுகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி, ஆர்பி உதயகுமார் ஆகியோர் முன்னிலையில், அதிமுகவில் மீண்டும் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் மகேந்திரன். அவருடன் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், பின்னர் பொதுச் செயலாளர் தேர்தல் நடந்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் அங்கீகரித்தது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி வருகின்றனர். அந்தவகையில், மதுரை உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவியுள்ளது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications