வாடகை கார்கள் புக்கிங் புல்... சசிகலாவை வரவேற்க ஊரெங்கும் படை திரட்டும் அமமுகவினர்..!
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் சுமார் 100 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் கும்மிடிப்பூண்டி தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கட்சி நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு ஆட்களை திரட்டி வரும் பணிகளை கவனித்து வருகின்றனர்.

4 ஆண்டு
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா இம்மாதம் இறுதியில் விடுதலையாகிறார். ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாவார் எனக் கூறப்படும் நிலையில் இப்போதே அவரை வரவேற்று அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அமமுக நிர்வாகள் தொடங்கி விட்டனர்.

ஜனவரி 26-ம் தேதி
அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி இரவே தொண்டர்களை ஒசூர் செல்வதற்காக வாடகை கார்களை புக்கிங் செய்து வைத்திருக்கின்றனர். இதோடு ஊருக்கு தகுந்தவாறு ஒரு சில நிர்வாகிகள் பேருந்துகளை புக்கிங் செய்து வருகின்றனர். குறைந்தது 60 இடங்களில் இருந்து 100 இடங்கள் வரை சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட வேண்டிய ஸ்பாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தாக்கம் இருக்காது
சசிகலாவின் விடுதலை அதிமுகவிலோ, அரசியல் களத்திலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என அதிமுகவினர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், நிச்சயம் மிகப்பெரும் தாக்கத்தை சசிகலா ஏற்படுத்துவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அமமுகவினர். இதுமட்டுமல்லாமல் பிரிந்த கட்சி இணையவும் வாய்ப்பிருக்கிறது என இன்னும் நம்புகின்றனர் அமமுகவினர்.

அதிமுக நோட்டம்
இதனிடையே சசிகலா விடுதலை விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது அதிமுக தலைமை. சசிகலா விடுதலைக்கு பிறகும் கட்சியில் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படாத வகையில் அதற்கேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிருப்தியில் இருப்பவர்கள் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மூலம் சரிகட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications