ஆளுக்கு ஒரு பிளான்.. ஆளுக்கு ஒரு நம்பிக்கை.. ஆளப் போவது யாரு.. ஆட்சியை அள்ள போவது யாரோ!
Recommended Video
சென்னை: எடப்பாடி அரசு தப்புமா? அப்படி இல்லையானால் யார் தான் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பதில் விறுவிறு போட்டிகள் நடந்து வருகிறது. குறிப்பாக திமுக, அதிமுக, அமமுக என மும்முனை தாக்குதல்கள் தமிழக அரசியலை துளைத்தெடுத்து வருகிறது.
"22 தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம். மே மாதம் 23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று தங்க தமிழ்செல்வன் கூறியதும் எல்லா தமிழக கட்சிகளுக்கும் தூக்கி வாரிப் போட்டது.
தங்க தமிழ்செல்வன் இப்படி பேச என்ன காரணம்? திமுக பக்கம் அமமுக சாய்கிறதா? அமமுக பக்கம் திமுக சாய்கிறதா? அப்படி ஒருவர் மீது ஒருவர் சாய வேண்டிய அவசியம், நிர்ப்பந்தம் இப்போது என்ன வந்தது? என்று தெரியாமல் மண்டையை பிய்த்து கொண்டனர்.

குழப்பினார்
ஒருவேளை அமமுகவும் திமுகவுக்கு சாதகமாக வாக்களித்தால் எடப்பாடி அரசின் கதி என்னாகும்? திமுகவும், அமமுகவும் இணைந்துவிட வாய்ப்பு என்று தெரிந்தால், அதிமுக சும்மா இருக்காதே, ஏன் இப்படி தங்க தமிழ்செல்வன் குழப்பி அடிக்கிறார் என்று யோசித்தோம்.

விளக்கம்
ஆனால் இதற்கு தினகரனே ஒரு விளக்கத்தை தந்து முற்று புள்ளி வைத்துவிட்டார். திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு கொடுக்காது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். உண்மையிலேயே, திமுகவும், அமமுகவும் ஆளுக்கு ஒரு பக்கம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும்போது, இது சாத்தியமில்லைதான்.

இது ஒரு கணக்கு
குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் வென்றால் தான் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும். குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் வென்றால்தான் திமுக ஆட்சியை அமைக்க முடியும். அதிமுகவை பொறுத்தவரை, எப்படியும் மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்றாலும், கையில் உள்ளதோ 114தான். அதனால் 4 இடங்களில் மட்டும் ஜெயித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கணக்கு!

மற்றொரு கணக்கு
மற்றொரு பக்கம், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் இவர்களை தவிர அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு என மொத்தம் 6 பேர் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடிக்கிறார்கள். ஒருவேளை எதிராக போய்விட்டால், ஏற்கனவே 4 + 6 என்று 10 பேர் ஆதரவு எடப்பாடிக்கு தேவைப்படும். இது மற்றொரு கணக்கு.

அதிமுக பிளான்
அதனால்தான், 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கவிழ்க்க ஏதாவது முயற்சி செய்தால், ஆளுநரிடம் தனக்கே பெரும்பான்மை இருப்பதாக சொல்லவும், அதனை நிரூபிக்கவும் ஆளுநரிடம் வாய்ப்பு கேட்கலாமா என்று யோசித்து வருகிறாராம்.

திமுக பிளான்
அதேபோல திமுக எடுத்து கொண்டால், கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்க எப்படியும் ஒத்துக்காது. தனித்து தான் ஆட்சி அமைக்க யோசிக்கும். அதனால் யாரையும் உடன் சேர்த்து கொள்ளாமல் தனித்து நின்று ஆட்சியை கவிழ்ப்பதுதான் ஸ்டாலின் பிளானாம்!

அமமுக பிளான்
21 சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றி அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்துவதுதான் தினகரன் பிளான்! அதிமுக அதிருப்தியாளர்களை கைக்குள் போட்டு கொள்வது, மறைமுக டீலிங், தேவைப்பட்டால் அவர்களிடம் தாராளங்களை காட்டுவது என உள்ளடி வேலைகள் அமமுகவில் ஜரூராக நடந்து வருகிறது.

கச்சித வேலைகள்
ஆக மொத்தம், ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிமுகவும், ஆட்சியை கவிழ்க்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அமமுகவும் தனித்தனி பிளான்களை போட்டு காய்களை கச்சிதமாக நகர்த்தி வருகின்றன!












Click it and Unblock the Notifications