சென்னை அம்பத்தூர் பத்திரப்பதிவு ஆபீசுக்கு போனதுமே ஆடிப்போன மணி.. அதிமுக பிரமுகர் அதிரடியாக கைது
சென்னை: சென்னை செங்குன்றத்தை அடுத்த கிராண்ட் லைன் பகுதியில் 1,780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை மணி என்பவர் வாங்கி உள்ளார், அந்த நிலத்தை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மகனின் திருமணத்திற்கு அந்த நிலத்தை விற்க முயன்றார். அப்போது அந்த இடம் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு தில்பேன் பெரால் கோமாஸ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த அரசு என்பவர் இப்படி மோசடி செய்ததாக கைதாகி உள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலர் வேறு நபர்களின் இடத்தை அவர்களுக்கே தெரியாமல் போலியாக ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்கிறார்கள். இது தெரியாமல் இருக்கும் இடத்தின் உண்மையான உரிமையாளர்கள் சில வருடங்கள் கழித்து நிலத்தை அல்லது இடத்தை விற்க முயலும் போது, உண்மையான சிக்கல் தெரிய வருகிறது.

வேறு நபர்கள் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம் அப்போது தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. அப்போது ஒன்றுமே செய்ய முடியாமல் பரிதவித்து போகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க கோருகிறார்கள். அப்படித்தான் சென்னையில் நடந்துள்ளது. மோசடி பத்திரப்பதிவு குறித்து பார்ப்போம்.
சென்னை கே.கே.நகர் 15-வது செக்டாரில் வசிக்கும் 65 வயதாகும் மணி என்பவர் செங்குன்றத்தை அடுத்த கிராண்ட் லைன் பகுதியில் 1,780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை வாங்க விரும்பியுள்ளார். அந்த நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து வாங்கியுள்ளார். அந்த நிலத்தை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவத்தில் வைத்திருந்து வந்துள்ளார். இந்நிலையில் மணி தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக தான் வாங்கி போட்டிருந்த 1780 சதுர அடி நிலத்தை விற்க முயன்றார்.
அப்போது அந்த இடம் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு தில்பேன் பெரால் கோமாஸ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை போன்று ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக அதே கிராண்ட் லைன் பகுதியைச் சேர்ந்த அரசு (52) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் புழல் ஒன்றிய அ.தி.மு.க. அம்மா பேரவை செயலாளராக பதவி வகிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாடியநல்லூரில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.65 லட்சம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications