"தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் நேரம்!" அது சரி எப்போது உயரும்? விளக்கமாக சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், தங்கம் விலை மேலும் குறையுமா.. எப்போது அதிகரிக்கத் தொடங்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை கொரோனா காலத்தில் எங்கோ எகிறி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த காலங்களிலும் கூட தங்கம் விலை உயர்ந்தாலும் கொரோனா காலகட்டத்தில் தான் அது ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

இதற்கிடையே தங்கம் விலை கடந்த சில காலமாகப் பெரியளவில் ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் இருந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 5,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்கம் விலை குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: பொருளாதாரம் என்பது எப்போதும் பலருக்கும் சிக்கலான மற்றும் குழப்பமான ஒன்று. இதன் காரணமாகவே பொருளாதாரம், சேமிப்பு என்றாலே பலரும் தெரித்து ஓடுவார்கள். ஆனால், சிக்கலான பொருளாதாரத்தையும் எளிதாக விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன். சேமிப்பு, முதலீடு தொடங்கி பொருளாதாரத்தில் இருக்கும் அனைத்து மேட்டர்களையும் எளிய மக்களுக்குப் புரியும்படி சொல்பவர் ஆனந்த் சீனிவாசன். கடந்த காலங்களில் அவர் சொன்ன பல வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறது.
குறிப்பாகச் சென்னையில் வசிப்பவர் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளத் தேவையில்லை என்று எல்லாம் அவர் சொன்ன வீடியோ நெட்டிசன்களிடையே பேசுபொருள் ஆனது. இவர் எப்போதும் சொல்வது ஒவ்வொரு குடும்பத்திடமும் குறைந்தது 200 கிராம் தங்கம் ஆவது இருக்க வேண்டும் என்பது தான். இப்போது தங்கம் விலை ரூ.5800 என்ற ரேஞ்சில் இருக்கும் நிலையில், இது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை: வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில், "தங்கம் கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்துள்ளது. ரூ.5800 என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கத்தை வாங்குவது குறித்து யோசிக்கலாம். இப்போது இல்லை என்றாலும் கூட வரும் 16-18 மாதங்களில் இது நிச்சயம் ஏறும்.. இது தங்கத்தில் முதலீடு செய்ய அற்புதமான தருணம்" என்று அவர் கூறியிருந்தார்.
தங்கம் விலை அதிகரிக்கும் எல்லாம் ஓகே.. ஆனால், இந்த முறை எதற்காக அதிகரிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் வரும். இது தொடர்பாகவும் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார். அவர், "தங்கம் விலை இப்போது நல்ல ரேஞ்சில் இருக்கிறது. இன்னும் குறையக் குறையக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து யோசிங்கள்.. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் போது நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும். எனவே, இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்" என்றார்.
என்ன காரணம்: பொதுவாகப் போர், இயற்கை பேரழிவு உள்ளிட்ட பெரும் ஆபத்துகள் ஏற்படும் போது பாதுகாப்பிற்காகத் தங்கத்தின் மீது பலரும் முதலீடு செய்வார்கள். கொரோனா, ரஷ்யா போர் சமயங்களில் தங்கம் விலை அதிகரிக்க இதுவே காரணம். இது மட்டுமின்றி அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைப் பொறுத்தும் தங்கம் விலை மாறும். அதாவது வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கம் விலை குறையும். வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலை எகிறும்.
இப்போது அமெரிக்க வட்டி விகிதம் 5.5%ஆக இருக்கும் நிலையில், இந்தாண்டின் பிற்பகுதி முதல் அமெரிக்கா தனது வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் குறைக்க ஆரம்பிக்கும் போது தங்கம் விலை அதிகரிக்கும் என்பதே பலரது கணிப்பு. ஆனந்த் சீனிவாசனும் இப்போதே அதையே தான் கூறியிருக்கிறார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications