ஸ்டாலின் ராகுல் பழக்க வழக்கம் தெரியுமா.. திமுக - காங்கிரஸ் கூட்டணி.. அன்பில் மகேஷ் அப்டேட்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் பனிப்போர் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஸ்டாலினும், ராகுலும் ஒரே போன் காலில் இந்த பிரச்சனையை முடித்துவிடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்தாலும் காங்கிரஸ் கட்சி குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது [Anbil Mahesh].

திமுக காங்கிரஸ் பிரச்சனை
திமுக சொல்லும் 25 தொகுதிகள் போதாது. தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் நல்ல புரிதலான உறவில் இருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் உள்ளது. யார் என்ன வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள்.
ஒரே போன்கால்
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு கூட்டணியை இவ்வளவு தூரம் கொண்டு செல்வது சாதாரணமானது கிடையாது. கொள்கை ரீதியாக கூட்டணி அமைத்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். ராகுலும், ஸ்டாலினும் ஒரே போனில் கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை முடித்துவிடுவார்கள். கூட்டணி குறித்து 2 தலைவர்களும் இறுதி முடிவு எடுப்பார்கள்.
கொள்கை ரீதியாக ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். எல்லோரும் வாருங்கள். ஒன்றாக போராடுவோம். நமக்குள் இருக்கும் பிரச்சனையை எப்போது வேண்டுமானாலும் பேசி தீர்க்கலாம். ஆனால் நாட்டிற்கான பிரச்சனையாக மிகப்பெரிய அச்சுறுத்தலை பாஜக கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஓரணியில் தமிழ்நாடு
அண்ணன் ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பிறகு ஓரணியில் தமிழ்நாடாகவே அரசியல் களம் மாறிவிட்டது. எனவே எதிர்க்கட்சிகள் நினைப்பது போல எதுவும் நடக்காது. எங்கள் தலைவர் சொன்னதை போல இது பாசிச சக்திக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான நடைபெறும் தேர்தல். தமிழ்நாடு ஓரணியில் திரண்டு நின்றுவெற்றி பெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications