ஆசிரியர்களுக்கு தொல்லை தந்தால்...டிசியில் கை வைப்போம்...மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழ் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
Recommended Video
பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடப்பதும் ஆசிரியர்கள் கண்டித்தால் அவர்களை மரியாதை குறைவாக நடத்துவதும், ஆசிரியர்களைத் தாக்குவதும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவருகின்றது.
கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் சம்பவத்தை பொறுத்தவரை மாதனூரில் தாவரவியல் முதுகலை ஆசிரியர் சஞ்சய் என்பவர் ரெகார்ட் நோட்டை சமர்ப்பிக்கும்படி மாணவர்களிடம் கூறியுள்ளார்.

ஆசிரியர் மீது தாக்குதல்
அதை கேட்காத ஒரு மாணவன், வகுப்பறையில் பாய் விரித்து படுத்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ஆசிரியரை, மாரியும் மற்றொரு மாணவனும் அடிக்கப் பாய்ந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்காக முடிவெட்டி வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் கோபமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அவரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற சம்பவம் பள்ளி வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது.

கத்தியைக் காட்டி மிரட்டல்
தேனி தேவதானப்பட்டியில் புத்தகம் கொண்டுவராமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டிக்க, கத்தியை காட்டி ஆசிரியரை மாணவன் மிரட்டிய சம்பவமும் நடந்தேறியது. அதே மாவட்டத்தில் தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் கொண்டு வராத மாணவரை நோக்கி ஆசிரியர் சற்று கோபமாக கேட்க அதற்கு அந்த மாணவர் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆசிரியர்கள் அதிர்ச்சி
கடந்த சனிக்கிழமை கூட, வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரும்பு மேசையை மாணவர்கள் உடைத்தது தொடர்பாக ஆர்டிஓ கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பள்ளிக்கு வருவதற்கே அச்சமாக இருப்பதாக பல ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

நடத்தை சான்றிதழ்
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் இறுதி ஆண்டு முடித்து மாற்றுச்சான்றிதழ் பெறும் போது அதில் நடத்தை பற்றி குறிப்பிடப்படும். அதில் 'நன்று' என்று இருப்பது அவசியம். ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் ஒழுக்கமற்ற மாணவர் என்று மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடப்படும் என எச்சரித்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்படி குறிப்பிடப்படும் மாணவர்கள் வேறு பள்ளியில் அல்லது கல்லூரியில் சேருவது என்பது கடினமாகி விடும். தங்களை கடவுளாக போற்றாவிட்டாலும் சக மனிதராக மதிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications