பாமக சாதிக்கட்சியா? கட்சியின் இமேஜை பூஸ்ட் அப் செய்ய அன்புமணி வேற லெவல் ப்ளான்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே அது சாதிக்கட்சி என்ற பார்வையை மாற்றி எல்லோருக்கும் பொதுவான கட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 7 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை பதவியை பாமகவுக்கு கொடுக்க அதிமுக தரப்பு முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் 7 தொகுதிகளில் ஒன்றிரண்டு தொகுதிகளை தனித் தொகுதிகளாக கேட்டு வாங்கி அங்கு பாமக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து பாமக தரப்பில் வேட்பாளர் களமிறக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. அதேபோல் விழுப்புரம் தனித் தொகுதியிலும் பாமக நேரடியாக களம் காண விரும்புகிறது. இதற்கு காரணம் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாமகவை சேர்ந்த ஒருவர் எம்.பி.ஆக இருக்க வேண்டும் என்ற கணக்குத் தான்.
தருமபுரி, ஆரணி, சிதம்பரம், விழுப்புரம், அரக்கோணம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகளில் பாமக போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. 2019 ஃபார்முலாவை கைவிட்ட பாமக கடந்த 2014 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல் ஃபார்முலாவை மீண்டும் கையிலெடுத்திருப்பதாக தெரிகிறது. 2014ஆம் ஆண்டு இரண்டு தனித் தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. மீண்டும் அதே போல் இந்த முறையும் 2 தனித் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது.
இதன் மூலம் பாமக என்றாலே அது சாதிக்கட்சி என்ற முத்திரையை அகற்ற முடியும் எனக் கணக்குப் போடுகிறார் அன்புமணி. இன்னும் ஒரு வாரத்திற்குள் பாமக தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமான முறையில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இன்னுமே பாஜக தனது முயற்சிகளை கைவிடாமல், பாமகவை தங்கள் பக்கம் அழைத்துச் செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சி.வி.சண்முகமோ மீண்டும் பாமகவை அதிமுக பக்கம் அழைத்து வருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாமகவுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் நிலையான கணிசமான வாக்கு வங்கி என்பது கவனிக்கத்தக்கது. தேர்தல் தேதி அறிவித்த ஓரிரு நாட்களில் பிரச்சாரத்தை தொடங்கும் வகையில் பாமக தரப்பில் பரப்புரை பயண நிகழ்ச்சி நிரல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications