தவெக ஆட்சி அமைக்க பாமக ஆதரவு அளிக்குமா? 2 வார்த்தையில் அன்புமணி கொடுத்த பதில்!
சென்னை: தவெக ஆட்சி அமைக்க பாமக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி பதில் அளிக்க மறுத்துள்ளார். தவெக பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் 5 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருக்கும் சூழலில், பாமக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளதால், தவெக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 107ஆக உள்ளது. இதனால் தவெக ஆட்சியை அமைக்க 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருந்தது. இப்படியான சூழலில், காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்எல்ஏ-க்கள் இருப்பதால், தவெக கூட்டணி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 6 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், பாமகவின் ஆதரவை தவெக நாடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சட்டசபைத் தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி பேசுகையில், தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்திருக்கிறது. அதனை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி, வணக்கம்.. நன்றி.. என்று பதில் அளித்து சென்றுள்ளார். தவெக ஆட்சி அமைக்க பாமக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கும் பதில் அளிக்காமல் மறுத்து சென்றார்.
இதனால் தவெக தரப்பில் பாமகவுக்கு இதுவரை எந்த ஆதரவு கோரிக்கையும் செல்லவில்லை என்று தெரிகிறது. நீண்ட காலமாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை அன்புமணி வலியுறுத்தி வரும் சூழலில், இம்முறை அதற்கான வாய்ப்புகள் தமிழக அரசியல் கைகூடி இருக்கிறது. அதேபோல் தவெக தரப்பில் விசிகவிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் பாமகவை தவிர்த்திருக்கலாம் என்று தெரிகிறது. பாமக மற்றும் விசிக இடையிலான மோதல் காரணமாக தவெக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இம்முறை தனித் தொகுதிகளில் தவெக 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாமகவை கூட்டணிக்கு கொண்டு வந்தால், அது சிக்கலாகும் என்றும் தவெக ஆலோசித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications