வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு.. தமிழகத்தில் புரட்சி வரனும்! நேபாளத்தை கை காட்டும் அன்புமணி ராமதாஸ்!
கடலூர்: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15% உள் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் எனவும், அது தொடர்பாக இன்னும் இரண்டு மாதங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்திருக்கிறார் பாமக தலைவர் ஆன அன்புமணி ராமதாஸ். அண்டை நாடான நேபாளத்தில் புரட்சி வெடித்தது போல தமிழகத்திலும் இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் நிச்சயம் வரும் எனவும் அன்புமணி கூறியிருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து பாமகவினர் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் இரண்டு மாதங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அதனைக் கொடுக்க மறுப்பதைக் கண்டித்து இன்னும் இரண்டு மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை பாமக சார்பில் நடத்த உள்ளோம். பாமகவினர் அனைவரும் அமைதியாக அறவழியில் கலந்துகொண்டு அனைவரும் சிறையை நிரப்ப வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஐந்து லட்சம் பேர் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களும் பங்கெடுக்க வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும், மாற்றம் வரும். நேற்று முன்தினம் அண்டை நாடான நேபாளத்தில் புரட்சி வெடித்தது.
இளைஞர் புரட்சி
அதனால் அங்கு ஊழல் நிர்வாகம் மாற்றப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பு வங்கதேசத்திலும் வெடித்தது. அதே போல இலங்கையிலும் புரட்சி வெடித்தது. அதனைத் தொடர்ந்து அங்கெல்லாம் ஆட்சி மாற்றம் நடந்தது உலகிற்கே தெரியும். இதற்கு காரணம் அங்கு இருந்த இளைஞர்கள். அதுபோல இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் நிச்சயம் வரும். அதுபோல தமிழ்நாட்டிலும் திமுக எங்களுக்கு வேண்டாம் என்று இளைஞர்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
என்எல்சி விவசாயம்
என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களைப் பாழாக்கி வருகிறது. கடலூர் பகுதியில் விவசாய நிலங்களில் தற்போது கடல் நீர் உள்வாங்கியுள்ளது. வரும் தலைமுறையைக் காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. என்எல்சி நிறுவனம் கடலூருக்கு வருவதற்கு முன்பு தன்னூற்று இருந்தது. சாதாரணமாக சில அடிகள் மண்ணைத் தோண்டினாலே தண்ணீர் கிடைத்துவிடும். தற்போது 700, 800 அடிக்குத் தண்ணீர் சென்றுவிட்டது. இதைப் பற்றி எல்லாம் திமுக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழக முதலமைச்சர் மக்கள் வரிப் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகிறார்.
திமுக விமர்சனம்
ஏற்கனவே இங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு எதற்காக ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் செல்ல வேண்டும்? அவர்களை அழைத்து கையெழுத்துப் போடச் சொன்னால் போடப் போகிறார்கள். அதற்கு ஏன் முதலமைச்சர் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும்? டையும் கோட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சென்று கையெழுத்துப் போடலாம். அப்படித்தான் இந்த முறைகள் உள்ளன. ஆட்சி முடிவதற்கு இன்னும் நான்கரை மாதங்கள் தான் உள்ளன. அவர்கள் வந்து முதலீடு செய்யப் போவதும் கிடையாது." என கூறினார்.












Click it and Unblock the Notifications