ராமதாஸ் எங்கள் குலச்சாமி! பாமகவுக்கு நான்தான் தலைவர்! அன்புமணி திட்டவட்டம்
சென்னை: ராமதாஸ் எங்கள் குலச்சாமி, குலதெய்வம். பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் நான் என அன்புமணி ராமதாஸ் இன்று நடந்த பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் ராமதாஸ் எங்கள் குலதெய்வம், குலச்சாமி. பாமகவை மேலும் வலுப்படுத்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

பழைய உறுப்பினர்கள் புதிய உறுப்பினர் அட்டையை உங்கள் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுங்கள். ராமதாஸின் கொள்கையை கடைப்பிடிப்போம். 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது.
உறுப்பினர்கள் 1.5 லட்சம். ஆனால் வாக்களித்தது 65 ஆயிரம் பேர்தான். சிறப்பாக பணியாற்றுபவர்களை மாற்றக் கூடாது. கட்சியினரின் மனவேதனை எனக்குப் புரிகிறது.
வெளியே சொல்ல முடியாத அளவுக்கு எனக்கும் மன வேதனை இருக்கிறது. கட்சியினர் எனக்கு அடிபணிந்தவர்கள் என நினைக்க மாட்டேன். கட்சியில் எல்லாரும் சேர்ந்து பணியாற்றுங்கள். இவங்க ஆள், அவங்க ஆள் என இல்லாமல் ஒற்றுமையாக பணியாற்றுங்கள்.
மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அத்தனை பேர் வந்திருந்தீர்கள். நீங்கள் எல்லாம் உங்கள் சொந்த செலவில், சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தீர்கள். வந்தது முதல் நிகழ்ச்சி 10 மணிக்கு முடிந்தது வரை அத்தனை கட்டுப்பாட்டுடன் இருந்தீர்கள்.
இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்த ஆளும் கட்சி அதிர்ந்து போய்விட்டது. அதனால்தான் நம் கட்சியில் நடக்கும் சில விஷயங்களை பெரிதுப்படுத்தி வருகிறது. அதை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்.
தைரியமாக இருங்கள். உங்களை யாரும் நீக்க முடியாது. கட்சிக்குள்ளேயும் சரி, கட்சியின் வெளியேவும் முடியாது. பொறுப்பு மாற்றங்கள் குறித்து வரும் தகவல்களை பெரிதாக ஏற்றிக் கொள்ள வேண்டாம். பொதுக்குழுவால் தேர்வான தலைவர் நான், நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். கட்சியில் உள்ள சின்ன சின்ன குழப்பங்களை சரி செய்வோம். தூசியை தட்டுவதை போல் விமர்சனங்களை தட்டிவிடுங்கள். காடுவெட்டி குருவின் கனவை நிறைவேற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணி குறித்து ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அதாவது "அன்புமணி, முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்த ஆத்திரத்தில் தாயை பாட்டிலால் அடித்தார்.
மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் சவுமியாவும் என் காலில் வந்து விழுந்தனர். அன்புமணி நிறைய பொய் பேசுவார்" என குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகளை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ராமதாஸ்தான் குலச்சாமி என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications