முடிவுக்கு வரும் ராமதாஸ் - அன்புமணி மோதல்.. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த 1 மணி நேர மீட்டிங்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். நிறுவனர் ராமதாஸை சந்திக்க, சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார் அன்புமணி. ராமதாஸை சுமார் 1 மணி நேரம் சந்தித்துப் பேசிய பின் அங்கிருந்து கிளம்பினார் அன்புமணி.
கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.

பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் தாமே தலைவர் என அன்புமணி செயல்பட்டு வந்தார். இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வந்தன.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின் போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப் பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதேசமயம், பழைய நிர்வாகிகளே பொறுப்பில் நீடிப்பதாக அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்றும் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்றும் வெளியானது. அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் தென் சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16 ஆம் தேதி முதல், ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். அதன்படி இன்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியும் பாமகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு வரும் வியாழக்கிழமை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவர் ராமதாஸை அன்புமணி சந்தித்து உள்ளார். பாமக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸை சந்தித்து சமாதானம் செய்ய அன்புமணி திட்டமிட்டு, தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க, சென்னையிலிருந்து தைலாபுரம்
தோட்டத்துக்குச் சென்றடைந்தார் அன்புமணி. அங்கு தனது தந்தை ராமதாஸ் மற்றும் தாயார் சரஸ்வதியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராமதாஸை சந்தித்தபின் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார் அன்புமணி. இந்தச் சந்திப்பால் கருத்து வேறுபாடு முடிவுக்கு வருமா என பாமக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications