“அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை.. இதுதான் கட்சி விதி”.. வழக்கறிஞர் பாலு விளக்கம்!
சென்னை: "அன்புமணியை நீக்கி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது. அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை. கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே உள்ளது" என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்துள்ளார்.
பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பாமக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்தார். தனி அணியைப் போல அன்புமணி செயல்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமதாஸ் அறிவிப்பு
தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. இதற்காக இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தவிர்த்திருக்கிறார். நேரிலும் வரவில்லை. கடிதமும் தரவில்லை. தொலைபேசி மூலமும் அழைக்கவில்லை. இந்நிலையில் அன்புமணி பதிலளிக்க வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவர் பதிலளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்டதாக கருதப்படுகிறது.
அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். எனவே இவரை பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறேன். மேலும் பாமகவின் வளர்ச்சிக்கு அன்புமணி இடையூறாக இருந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குகிறேன். அன்புமணி உடன் பாமகவை சேர்ந்த யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது." எனத் தெரிவித்தார்.
பெயரை பயன்படுத்தக் கூடாது
மேலும், தற்போது அன்புமணி உடன் 10, 15 பேர் மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் நான் வளர்த்தவர்கள். இந்த நிலைக்கு நானில்லாமல் வந்திருக்க முடியாது. இவர்கள் திருந்த வாய்ப்பு கொடுத்து அவர்களை மீண்டும் பாமகவில் சேர்க்க தயாராக இருக்கிறேன். அன்புமணியை பொறுத்தவரை அப்பா சொல்வதை கேளுங்கள் என்று மூத்தவர்கள் அறிவுரை கூறியும் அன்புமணி கேட்கவில்லை. தனது தலைமையில் தனி அணி செயல்படுவது போல் செயல்பட்டுள்ளார். இன்று முதல் எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. இரா என்ற இனிஷியல் தவிர, ராமதாஸ் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக கூறுகிறேன்.
ஒருவழியாக கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த களையை நீக்கி விட்டேன். கட்சியில் இருந்து நீக்கி விட்டீர்கள். அவர் என்ன செய்வார் எனக் கேள்வி எழுப்பலாம். அதற்கும் நான் விடை பதில் சொல்கிறேன். அவர் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து கொள்ளலாம். ஏற்கனவே இதே விஷயத்தை மூன்று முறை சொல்லியிருக்கிறேன். பாமக என்பது தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. அது பிள்ளையாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் முடியாது. ஒருவேளை அவர் கட்சி தொடங்கினாலும் அது வளராது." என்றார்.
பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி
இந்நிலையில், அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உரிய விளக்கத்தை அளிக்கிறேன். அன்புமணியை நீக்கி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது. அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை. பாமக நிர்வாக விதிகளின் படி, கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே உள்ளது. நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை
பதவி நீக்கம் செய்வது, கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. அவரது அறிவிப்பு கட்சியில் எந்தவகையிலும் கட்டுப்படுத்தாது. ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு தீர்மானம் குறித்து எங்கள் விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து, பாமக தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகாலத்தை அடுத்த 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பாமக தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் திகழ்கிறார்கள். பாமகவை எந்த விதத்திலும் ராமதாஸின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது.












Click it and Unblock the Notifications