ராமதாசுக்கு பாரத ரத்னா விருது! டெல்லிக்கு அன்புமணி விடுக்கும் டிமாண்ட்! பொதுக்குழுவில் இறுக்கம்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் சற்று இறுக்கமாகவே பொதுக்குழு மேடையில் அமர்ந்திருந்தார்.
இருப்பினும் தாம் பேசிய போது ராமதாசின் முடிவை மனதார ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என கட்சியினருக்கு உற்சாக டானிக் வழங்கியுள்ளார். இதனிடையே ராமதாசுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கவில்லையே என்ற கவலையையும் அவர் தெரிவித்தார்.

பாமக சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது;
''குடியரசு தினத்தை ஒட்டி மத்திய அரசு விருதுகளை அறிவித்தது. அதில் தகுதியான பலருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அதில் எனக்கு ஒரு வருத்தம். 85 வயதாகும் மருத்துவர் ராமதாஸ்க்கு பாரத ரத்னா வழங்கவில்லை என வருத்தப்படுகிறேன். முதல்வராக இருந்து சாதனை செய்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எந்தப் பவியிலும் இல்லாமல் ராமதாஸ் பல சாதனைகளை செய்துள்ளார்.
சமூக நீதி என்று சொன்னால் ராமதாஸ் மட்டும் தான் உள்ளார்.இந்தியாவில் எந்த கட்சியாவது நிழல் பட்ஜெட் வெளியிடுகிறதா? பாமக தான் வெளியிடுகிறது. எந்த முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது அறிக்கை கொடுப்பது பாமக தான். மற்றவர்கள் நம்முடைய அறிக்கையை பார்த்து காப்பி அடித்து வெளியிடுவார்கள்.
பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் சமூக நீதிக்காக குரல் கொடுப்பதே இல்லை. 30 ஆண்டுகளாக பாமக போராடி வந்தது முடியவில்லை. பின்னர் ஆட்சி அதிகாரம் கிடைத்தது, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டத்தை பாமக கொண்டு வந்தது.
பாமக ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும். மகளிருக்கு மாதம் ரூ.1000, பொங்கலுக்கு 1000, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கொடுத்தோம் என முதல்வர் பேசுகிறார். இதெலாம் மக்கள் வளர்ச்சி திட்டமா, இதன் மூலம் மக்கள் முழுமையான வளர்ச்சி பெற்று விடுவார்களா? மக்கள் நல திட்டம் என்றால் பாமக கொண்டு வந்த 108 அவசர ஊர்தி போல இருக்க வேண்டும்..
தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழை வளர்க்கவில்லை. இனி வரும் காலம் பாமக வின் காலம். கூட்டணி தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். அவர் யாருடன் கூட்டணி அமைத்தாலும் நாம் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.''












Click it and Unblock the Notifications