இரவில் நீல நிறத்தில் ஒளிரும் கடல் அலைகள்! மனதை கொள்ளை கொள்ளும் திருவான்மியூர் பீச்! அன்புமணி ஹேப்பி
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரையில் இரவு நேரத்தில் ஒளிரும் ஃப்ளோரசன்ட் அலைகள் எழுவது மனதிற்கு இதமளிப்பதாக பாமக எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் கடல் அலைகள் ஒளிர்ந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அன்புமணி ராமதாஸ் கிழக்கு கடற்கரைச் சாலையில்தான் இருக்கிறார். பீச் அவுஸ் எனப்படும் கடற்கரைக்கு அருகில் வீடு கட்டி உள்ளார்.

அப்படித்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சிகளை ஈசிஆரில் இருந்து கண்டு களித்ததாக அவரது மனைவி சவுமியா அன்புமணி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அழகான ஒரு காட்சியை அன்புமணி வெளியிட்டுள்ளார்.
அதாவது ஈசிஆரில் இரவு நேரத்தில் வரும் அலைகள் ஏதோ விளக்குகள் எரிவது போல் பிரகாசமாக எரிகின்றன. இரவு நேரத்தில் ஒளிரும் கடற்கரைகள் உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அவற்றில் நம் தமிழகத்திலும் உள்ளது. திருவான்மியூர் கடற்கரையில்தான் இது போல் கடல் அலைகள் இரவு நேரத்தில் ஒளிரும்.
இரவில் கடல் நீல நிறத்தில் மாறும் போது இந்த நிகழ்வு நடக்கும். இதற்கு பயோலுமினென்சென்ஸ் என பெயராகும். பயோலுமினென்சென்ஸ் எனப்படுவது பாக்டீரியா, பூஞ்சை, பாசிகள், பூச்சிகள் போன்ற நீர் வாழ் உயிரினங்களால் ஏற்படுகிறது. இது இந்த உயிரினங்களுக்குள் நிகழும் ஒரு வகை வேதியியல் எதிர்வினையாகும்.
இந்த நிகழ்வு ஏற்படும் போது அலைகளால் உயிரினங்கள் கரைக்கு அடித்து வரப்படுகின்றன. இதனால்தான் கடற்கரைகள் நீல நிறத்தில் மின்னுகின்றன. இது போல் உலகில் எந்தெந்த கடற்கரைகள் இரவு நேரத்தில் மின்னுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரையில் ஹேவ்லாக் தீவு அமைந்திருக்கும் கடலில்தான் இது போல் ஏற்படும். அது போல் லட்சத்தீவு பகுதிகளில் உள்ள பங்காரம் கடற்கரையிலும் இப்படி நடக்கும். இங்கு பாசி, ஜெல்லிமீன்களால் இது போன்று நீல நிறத்தில் ஒளிர்கின்றன. அது போ் கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையிலும் இது போன்ற அற்புத காட்சி நிகழ்கிறது.
உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை, மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரை, திருவான்மியூரில் உள்ள ஈசிஆர் கடற்கரை உள்ளிட்டவை இது போல் நீல நிறத்தில் ஜொலிக்கும். இரவு நேரத்தில் இதை காண நிறைய பேர் வருவதுண்டு. இது போன்ற நிகழ்வுகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழும் என கூறப்படுகிறது.
ஆனால் அக்டோபர் மாதமான தற்போது ஈசிஆரில் நடந்துள்ளது. ஒரு வேளை வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடலில் உள்ள பாசிகள் அடித்து வரப்பட்டனவா என தெரியவில்லை. இந்த திருவான்மியூர் கடற்கரையானது அழகான சூரிய உதய காட்சிகளை வழங்கும். இங்கு 2019 ஆம் ஆண்டு பயோலுமினென்சென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருக்கும் ஒரே ஒளிரும் கடற்கரை இதுதான்.












Click it and Unblock the Notifications