கடலூரைக் கண்டுக்கவே இல்லையே.. இப்படியே போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க! அன்புமணி காட்டம்!
கடலூர்: நெல், கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருப்பது போல முந்திரி மற்றும் பலா விவசாயிகளுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளின் விளை நிலத்தை அழித்து அதிலிருந்து பழுப்பு நிலக்கரியை எடுப்பது நியாயமா? விவசாய நிலங்களை அழித்துவிட்டால் உணவுக்கு என்ன செய்வீர்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது முந்திரி மற்றும் பலா விவசாயிகளைச் சந்தித்துப் பேசியவர், அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்தார். பின்னர் விவசாயிகளிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 63% பேர் விவசாய மற்றும் விவசாயத்தைச் சார்ந்தவர்கள். விவசாயிகள் படும் கஷ்டங்கள் சாதாரண கஷ்டங்கள் கிடையாது.

அன்புமணி ராமதாஸ்
இன்றைக்கு அவர்களுடைய குறைகளைக் கேட்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு உள்ள குறைகளைச் சாதாரணமாகத் தீர்க்க முடியும். ஆனால் அரசுகள் இந்தப் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதே இல்லை. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் முந்திரியில் மூன்றில் ஒரு பங்கு கடலூர் மாவட்டத்தில் சாகுபடி ஆகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் முந்திரி விவசாயம் நடைபெறுகிறது.
கடலூர் விவசாயிகள்
அதில் 70 ஆயிரம் ஏக்கர் முந்திரி விவசாயம் கடலூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறுகிறது. 'தானே' புயலால் முந்திரி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. அவர்களை மீட்டெடுப்பதாக அரசாங்கங்கள் வாக்குறுதி கொடுத்தார்களே தவிர, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் முந்திரி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் இருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் முந்திரி கொட்டைகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
முந்திரி விவசாயிகள்
இறக்குமதி யார் செய்கிறார் என்று சொன்னால், கடலூர் மாவட்டத்தின் முன்னாள் எம்பி உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் இறக்குமதி செய்கிறார்கள். கடலூர் மாவட்ட உள்ளூர் விவசாயிகளை ஏமாற்றி அவர்கள் சம்பாதித்து வருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக முந்திரி விவசாயிகளுக்கு எத்தனையோ பல வாக்குறுதிகளைக் கொடுத்தது ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. முந்திரிக்காக தனியாக மண்டலத்தை உருவாக்குவோம் வாரியத்தை அமைப்போம் என்றெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார்.
பலா விவசாயிகள்
ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முக்கனிகளில் ஒரு கனியான பலாவும் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளைகிறது. முந்திரி, பலா போன்றவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஏராளமான உணவுப் பொருட்களைத் தயார் செய்யலாம் அவற்றை உள்ளூரிலும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் அதற்கு விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பலாவைப் பதப்படுத்தி சத்துமாவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கலாம். அதன் மூலமாகப் பல விவசாயிகளும் பயனடைவார்கள். அரசு பள்ளி மாணவிகளுக்கும் சத்து கிடைக்கும்.
அன்னிய செலாவணி
கேரளாவில் ஆராய்ச்சி செய்து பலாவிலிருந்து ஐஸ்கிரீம், ஜூஸ் உள்ளிட்ட 200 விதமான உணவுப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறார்கள். கேரளாவில் செய்யும் போது தமிழ்நாட்டில் ஏன் முடியாது? சென்னையில் பல திருமணங்களில் பலா பிரியாணி இருக்கிறது. பலாவை பல வகைகளில் விற்பனை செய்யலாம் அதற்கு குளிர் பதன கிடங்குகளும் விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. முந்திரியால் மட்டும் அன்னிய செலாவணியாக 7000 கோடி வந்து கொண்டிருந்தது.. ஆனால் தற்போது வெறும் 2000 கோடி மட்டும்தான் வருகிறது. ஏனென்றால் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
நிலக்கரி சுரங்கம்
பழுப்பு நிலக்கரியை எரித்து சுற்றுச்சூழலை நாசமாக்கி அதிலிருந்து மின்சாரம் எடுக்கக்கூடிய முறையைக் கையாள்கிறார்கள். தற்போது அறிவியல் உலகம் எங்கோ முன்னேறிவிட்டது. சூரிய மின்சக்தி காற்றாலை மூலம் என எவ்வளவு முறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் அவற்றையெல்லாம் விடுத்து விட்டு மண்ணையும் மக்களையும் நாசப்படுத்தக்கூடிய திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது. விவசாயிகளின் விளை நிலத்தை அழித்து அதிலிருந்து பழுப்பு நிலக்கரியை எடுப்பது நியாயமா? விவசாய நிலங்களை அழித்துவிட்டால் உணவுக்கு என்ன செய்வீர்கள்?" என்றார்.












Click it and Unblock the Notifications