வெளிவரும் பழைய சென்னை! மெரினா கடற்கரையில் தோன்றிய பழங்கால சிலை! ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பழங்காலத்தை சேர்ந்த சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னைக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் வந்தனர். ஆனால் அதற்கு முன்னரே சோழர்கள், பல்லவர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி, மயிலாப்பூர் வரை உள்ள கோயில்களே இதற்கு சாட்சி. இது தவிர ஏராளமான மண்டபங்கள், நினைவு தூண்கள் சென்னையின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் இதன் பழமையை மறைத்துவிட்டன.

இப்படி இருக்கையில்தான் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பழங்காலத்தை சேர்ந்த சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தகவலை அறிந்து வந்த காவல்துறையினர் சிலையை கைப்பற்றி மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சிலை திருமாலின் உருவத்தை போன்று இருப்பதாக அதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக இதுபோல கடந்த 2022ம் ஆண்டும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை என்று அடையாளம் காணப்பட்டது. இரண்டாவது சிலை முருகன் உருவம் பொறித்ததாகும். இதனையடுத்து சிலைகளை மீட்ட காவல்துறையினர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications