கடைசியில் இங்கேயும் வந்தாச்சு கஞ்சா வியாபாரம்.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிக்கிய புள்ளி!
சென்னை : சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா விற்க வந்த ஆந்திராவை சேர்ந்த நபரை, மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த 9 கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் அடையாளம் கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். சென்னையில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வருவதுடன், அதில் தொடர்புடைய கும்பலை பொறிவைத்து காவல்துறை பிடித்து வருகிறது.

மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆந்திராவைச் சேர்ந்த கண்ணம நாயுடு என்பவர் கஞ்சா விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதற்காக அவர் ஒன்பது கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். மருத்துவமனை என்பதால் காவல்துறையினரின் கெடுபிடி இருக்காது என திட்டமிட்ட கண்ணம நாயுடு, மருத்துவமனை வளாகத்தில் வைத்து கஞ்சாவை மற்றொரு நபரிடம் விற்க திட்டமிட்டுள்ளார்.
நோயாளிகள் வரத்தால் பரபரப்பாக காணப்படும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்ணம நாயுடு நின்று கொண்டிருந்ததால், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் மேல் சந்தேகம் வந்தது. இதனையடுத்து அவரை மடக்கிப் பிடித்து மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், அவர் வைத்திருந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில் ஒன்பது கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டு மருதுவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, தெரிய வந்ததால் மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற கண்ணம நாயுடு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆந்திராவில் கஞ்சாவை கடத்தி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் விற்பனை செய்ய முயன்ற கண்ணம நாயுடுவிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஆந்திராவைச் சேர்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இப்போது மருத்துவமனையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications