அடுத்தடுத்த ரயில் விபத்து.. மத்திய அரசு, ரயில்வே துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை
சென்னை: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி 8 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பலியானோரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு மத்திய அரசும், ரயில்வே துறையும் அவசரமாக செயல்பட்டு மக்கள் பாதுகாப்பான ரயில் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி அருகே சென்றது.

அப்போது திடீரென்று பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி இன்னொரு பயணிகள் ரயில் வந்தது.
இந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். 8 பேர் பலியான நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரயில்வே விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்வே துறையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை மத்திய அரசும், ரயில்வேயும் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
2023ம் ஆண்டு ஜூன் மாதம் பாலசோர் ரயில் விபத்து நடந்தது. அதனை தொடர்ந்து இப்போது விஜயநகரத்தில் இந்த விபத்து நடந்து இருப்பது பெருந்துயரம் தருகிறது. விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.
இந்தியாவில் கணிசமான மக்கள் தங்கள் பயணத்துக்கு ரயிலையே நம்பி உள்ளனர். இந்த சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications