“நீட் விலக்கை ஸ்டாலினால் மட்டுமே பெற்றுத்தர முடியும்” - அடித்துச் சொல்லும் அனிதா சகோதரர்
சென்னை: அனிதாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' எனப் பெயர் வைத்துள்ளார். இதனையொட்டி கடந்த 14 ஆம் தேதி அந்த அரங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்திருக்கிறார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்ட, அனிதாவின் குடும்பத்தினர் கடந்த 22 ஆம் தேதி அன்று அனிதாவின் குடும்பத்தினர், ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தீயில் கருகிப் போன அனிதாவின் கனவு:
முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில், இது குறித்து, "நீட் தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதா நினைவாக அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், ரூ. 22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு "அனிதா நினைவு அரங்கம்" எனப் பெயர் சூட்டியதற்காக அவரது தந்தை சண்முகம் சகோதரர்கள் மணிரத்தினம், சதீஷ்குமார் ஆகியோர் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு ஒரு செய்திக் குறிப்பில், "அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகளான அனிதா சிறுமியாக இருந்தபோதே அவரின் தாயார் இறந்துவிட்டார்.

தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், மத்திய அரசு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்குப் பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவித்ததால் மனமுடைந்தார்.
ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளைப் பெறுவது சாத்தியமில்லை என்பதையும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1-ம் நாள் மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது" என விளக்கப்பட்டிருந்தது.
அவரது மரணத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதற்கான சட்டப் போராட்டத்தை திமுக அரசு நடத்தி வருகிறது.
கடந்த 2022 ஜனவரி 12-அன்று முதல்வர் முன்னிலையில் இந்தியப் பிரதமரால் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. அதன் அடையாளமாகத்தான் அரங்கத்திற்கு அனிதா பெயர் இப்போது வைக்கப்பட்டுள்ளது.
அனிதாவின் மரணத்தை அடுத்து நீட் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சட்டரீதியாக ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அனிதாவின் குடும்பத்தினருடன் ஒரு அனுசரணையான போக்கையும் கடைப்பிடித்துக் கொண்டே வருகிறது. அதற்கான அடையாளம்தான் இந்தப் பெயர் சூட்டும் விழா நடந்துள்ளது.

எடப்பாடிக்கு உதயநிதி சொன்ன ரகசியம்:
அவ்விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, 'நீட் தேர்வு ரத்து செய்வதற்கு ஏதோ ரகசியம் வைத்திருப்பதாகச் சொன்னீர்களே? அதை ஏன் இன்னும் சொல்ல மறுக்கிறீர்கள்?' என்று கேட்டு வருகிறார்.
ரகசியம் ஒன்றும் இல்லை. எங்களுடைய கல்வி உரிமை பறிக்கப்படும்போது தைரியமாகக் குரல் கொடுக்கிறோம் இல்லையா? அதுதான் அந்த ரகசியம். இப்போது அனிதாவின் பெயரில் இந்த அரங்கத்தைத் திறந்துள்ளோம். அந்த அரங்கத்தையும் அந்தப் பெயரையும் நீங்கள் பார்க்கும்போது எல்லாம், அந்த நீட் தேர்வு ரத்துதான் உங்களுடைய மனதிற்குள் எழ வேண்டும். கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து ஆகும் வரை எங்கள் சட்டப் போராட்டம் தொடரும்" எனக் கூறியிருந்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே சட்டப்பேரவையில் அரசு மருத்துவமனைக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று முதன்முதலாகக் குரல் கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

இப்போது அனிதாவின் சகோதரர் மணிரத்னம் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அச்சந்திப்பில் என்ன பேசினார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? எனக் கேட்பதற்காக மணிரத்னத்திடம் பேசினோம்.
அவர், "நீட் போராட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் அனைத்துமே தொடர்ந்து போராடிக் கொண்டுதான் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதற்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, நீட் எதிர்ப்பு என்பதன் தாக்கம் இருக்கவே செய்தது.
அதன் பின் ஆட்சிக்கு வந்ததும் திமுக சும்மா இருந்துவிடவில்லை. அதற்காக ஏ.கே.ராஜன் குழுவைப் போட்டார்கள். அதன்பிறகு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள். அதைத் திரும்ப அனுப்பினார் ஆளுநர். அப்போதும் அவர்கள் விடவில்லை.
வரலாற்றில் முதன்முறையாக மீண்டும் அமைச்சரவையில் வைத்து மறுவடிவம் கொடுத்து ஆளுநருக்கே அனுப்பினார்கள். இந்த நிகழ்வுகளை வைத்தே திமுக நீட் எதிர்ப்பில் எந்தளவு உறுதியாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்யமுடியுமோ அதை வைத்து சட்டத்தை இயற்றி அனுப்புகிறார்கள். அத்துடன் சும்மா இருக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தில் எங்கள் குடும்பமும் உறுதுணையாக நிற்கவேண்டும் என நினைக்கிறோம்.
அதனடிப்படையில் தான் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மருத்துவமனை அரங்கத்திற்கு அனிதாவின் பெயரை வைத்ததற்காக நன்றி சொன்னோம். அமைச்சர் உதயநிதியையும் சந்தித்து நன்றி சொன்னோம்" என்கிறார்.

அனிதாவுக்காக உதயநிதி செய்த உதவிகள்:
தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி இந்த நீட் எதிர்ப்பில் தீவரமாக உள்ளார். அவர் தனது சட்டமன்ற உரையின் கன்னிப்பேச்சிலேயே அனிதாவின் பெயரை மருத்துவமனைக்கு வைக்கவேண்டும் என்று முன்மொழிந்தார்.
அதன்பின் அமைச்சராகப் பதவி ஏற்றபிறகு முதன்முதலாக அரியலூர் வந்த உதயநிதி, அரங்கத்திற்கு அனிதாவின் பெயரை வைத்து பலகையைத் திறந்துவைத்திருக்கிறார்.
திமுக ஒரு அரசியல் கட்சியாக அனிதா தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டுப் போய்விட முடியும். ஆனால், ஒரு அரசாங்கம் எங்களின் போராட்டத்திற்கு அங்கீகாரம் கொடுப்பதைப்போலத்தான், அனிதா பெயரை அரங்கத்திற்கு வைத்துள்ளார்கள். இது சாதாரண விஷயம் அல்ல.
உண்மையாகவே இதை எங்கள் குடும்பம் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பெயர் சூட்டும் நிகழ்வு எங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை அளிக்கிறது" என்கிறார்
"முதன்முதலாக இளைஞரணி செயலாளராக உதயநிதி பதவியேற்ற உடன் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்றார். அதற்குப்பிறகு ஒரு பொதுநிகழ்வில் அவர் பங்கேற்றார் என்றால், அது அனிதாவின் நூலகத்தைத் திறந்துவைக்க வந்ததுதான். உதயநிதியிடம் தன்னிச்சையாகவே நீட் போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா மீது ஒரு ஆதரவு மனநிலை உள்ளது.
கடந்த 2018 ஆண்டு இந்த நூலகம் திறக்கப்பட்டது. இதற்கும் உதயநிதிதான் நிதி உதவி செய்தார். இந்த நூலகம் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
இதில் 6 ஆயிரம் நூல்கள் உள்ளன. முதல்முறை வந்த போது நிறைய நூல்களை உதயநிதி பரிசளித்தார். தேர்தல் பரப்புரைக்கு வந்த போது நிறையப் புத்தகங்களைப் பரிசளித்தார்.
இங்கு டிஎன்பிஎஸ் வகுப்புகள் நடத்த முறையான ஆசிரியர்களை நியமிக்கப் பொருளாதார உதவி கேட்டோம். அதற்கும் உதயநிதி நிறைய உதவினார். இவை எல்லாம் வெளியே தெரியாத தகவல்கள். இப்படித் தொடர்ந்து திமுக அனிதாவின் நினைவாகப் பல உதவிகளைச் செய்து கொண்டேதான் உள்ளது.
அவரிடம் முதல்வரிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர், "உங்கள் அரசால்தான் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கித்தர முடியும். நீங்கள் அதை நிச்சயம் செய்வீர்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அப்படி விலக்கு கிடைத்தால், பெரிய அளவில் அதை நாங்கள் கொண்டாடத் தயாராக உள்ளோம்" என்றோம். அவர், "கட்டாயம் நடக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications