அண்ணா சிலை கை உடைப்பா? கேட்டவுடன் வேகமாக ஓடிய அதிமுகவினர்.. குன்றத்தூரில் பரபர - என்ன காரணம்?
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51 வது ஆண்டு தொடங்குவதை அடுத்து குன்றத்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா சிலையின் கை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51வது ஆண்டு தொடங்குவதை அடுத்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் விழாவிற்கு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 17.10.2022 - திங்கட்கிழமை 51-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
இதனை கொண்டாடும் வகையில் அன்று காலை 9 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

மாநிலம் முழுவதும்
இதனை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

குன்றத்தூர்
அந்த வகையில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவை அடுத்து குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்த அதிமுகவினர் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அண்ணா சிலையின் கைகள் உடைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து குன்றத்தூர் போலீசாரும், அதிமுகவினரும் அங்கு விரைந்தனர்.

அண்ணா சிலை
அங்கு விசாரித்த போது பெங்களூருவிலிருந்து பல்லாவரம் அடுத்த நாகல்கேனி தோல் தொழிற்சாலைலைக்கு பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் வழி தெரியாமல் அந்த வழியாக சென்றபோது வயர் உரசியதில் அண்ணா சிலையின் கை உடைந்து சேதம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டுநர் வெள்ளத்துரை(54) என்பவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

அதிமுகவினர் முடிவு
மேலும் இன்றைய தினம் அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருன்ஹ நிலையில் தற்காலிகமாக சேதம் அடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சேதம் அடைந்த சிலையை தற்காலிகமாக சரி செய்து விட்டு பின்னர் புதிய அண்ணா சிலையை அமைக்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications