அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்..எஃப் ஐஆர் லீக் ஆனது எப்படி! போலீஸ் மீது தப்பே இல்லை! அமைச்சர் விளக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம், காவல்துறை காரணம் இல்லை எனவும், அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலை கழகம்:
மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானசேகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை:
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (FIR) லீக் ஆனது. இந்த விவகாரத்தில், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, முதல் தகவல் அறிக்கை லாக் ஆவதில் தாமதமானதாகவும், அந்த தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், அல்லது புகார்தாரர்கள், குற்றவாளி தரப்புக்கு அளிக்கப்பட்ட நகல் மூலமாகவும் லீக் ஆகியிருக்கலாம் என விளக்கமளிக்கப்பட்டது.
அமைச்சர் ரகுபதி:
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சி.சி.டி.என்.எஸ் குறைபாடு:
மாண்பமை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
தவறு இல்லை:
மேலும், இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் இதில் எந்த தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்த உள்ளோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications