அரசு இல்லத்தை காலி செய்ய முடியாது.. சலுகை வேண்டும்... ஓய்வுக்கு பின்னும் முரண்டு பிடிக்கும் சூரப்பா
சென்னை: தனிப்பட்ட சில காரணங்களுக்கான சென்னையில் தங்க வேண்டியிருப்பதால் அரசு இல்லத்தை இரண்டு மாதங்களுக்கு காலி செய்ய முடியாது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் நியமனத்தின்போதே பலத்த சர்ச்சை எழுந்தது.
இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் இவர் ஓய்வு பெற்றார்.

மோதல் போக்கு
பணியில் இருக்கும்போதே இவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கே நிலவி வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி விண்ணப்பித்தது, அரியர் தேர்வு விவகாரத்தில் அரசின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டது என மோதல் போக்கு தொடர்ந்து. மேலும், இவர் துணை வேந்தராக இருந்த போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 250 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எங்கு சென்றாலும் நோட்டீஸ்
இதன் காரணமாகப் புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதில் முதல் கட்ட விசாரணையில் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறப்பட்டது. கடந்த தின தினங்களுக்கு முன் நீதிபதி கலையரசன் கூறுகையில், விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும் சூரப்பா ஓய்வு பெற்றாலும்கூட அவர் எங்குச் சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

காலி செய்ய முடியாது
இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும்கூட தமிழக அரசுடன் முரண்டு பிடித்து வருகிறார் சூரப்பா. துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அரசு குடியிருப்பை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று சூரப்பாவை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும் தனிப்பட்ட சில காரணங்களுக்கான அரசு இல்லத்தை காலி செய்ய முடியாது என்று சூரப்பா தெரிவித்துள்ளார்.

சலுகை வேண்டும்
இது குறித்து அவர் கூறுகையில், "அரசு குடியிருப்பை உடனடியாக காலி செய்ய முடியாது. சில தனிப்பட்ட காரணங்களுக்காகச் சென்னையில் தங்க உள்ளது. இதனால் குடியிருப்பை காலி செய்யக் குறைந்தபட்சம் இரண்டு மாதம் அவகாசம் வேண்டும். இதற்கு முன்னரும் துணைவேந்தராக இருந்தவர்கள் அரசு குடியிருப்பை உடனடியாக காலி செய்யவில்லை. இருந்தவர்கள் சில மாதங்களுக்கு பின்னரே காலி செய்தனர். எனவே, முன்னாள் துணைவேந்தர்களுக்குத் தரப்பட்ட சலுகை எனக்கும் வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications