கட்டுக்கட்டாக சிக்கிய ஆவணங்கள்.. ஞானசேகரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்த சிறப்பு புலனாய்வு குழு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு இன்று ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தியது. சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் பெட்டி பெட்டியாக ஞானசேகரன் வீட்டில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில், சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க, சிநேக பிரியா ஐபிஎஸ், அய்மான் ஜமால் ஐபிஎஸ், பிருந்தா ஐபிஎஸ் ஆகிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. தற்போது இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்ட மாணவியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் வீட்டில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சுமார் 6.30 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் பெட்டி பெட்டியாக அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

இதில் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது பற்றி அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுபியதற்கு, "கொஞ்சம் டைம் கொடுங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். ஞானசேகரன் வீட்டில் இருந்து இன்று பெட்டி பெட்டியாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே யார் அந்த சார்? என்ற வாசகங்களுடன் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், தற்போது ஞானசேகரன் வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டம் செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி சீமானும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நேரில் சந்தித்து மனு ஒன்றையும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடித்தக்கது.












Click it and Unblock the Notifications