"அப்போ போகாத மானமா இப்போ போய்டுச்சுனு டிஆர் பாலு மனசாட்சியே கேட்ருச்சு போல".. அண்ணாமலை காட்டம்!
சென்னை: திமுக எம்.பி டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜரானார். அதேசமயம் டிஆர் பாலு ஆஜராகவில்லை. இதுதொடர்பாக டிஆர் பாலுவை விமர்சித்து பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து , திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இதையடுத்து திமுகவினர் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். திமுக மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்திய அண்ணாமலைக்கு ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பினார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைப்பதாகவும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) அந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகினார். டிஆர் பாலு இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், டிஆர் பாலு இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாதது பற்றி விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#DMKFiles வெளியானதும், இல்லாத மானம் போனதாகக் கூறி, திமுகவின் டி.ஆர் பாலு அவர்கள் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானேன். ஆனால், வழக்கம்போல டி.ஆர். பாலு, இன்று ஆஜராகவில்லை. இத்தனைக்கும், இன்றைய தினத்தைக் குறிப்பிட்டுக் கேட்டது அவர்தான்.
சாராய ஆலை நடத்தி விவசாயிகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் போது போகாத மானம், யாருக்கு கொடுத்தாலும், இவருக்கு மட்டும் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று அன்றைய பிரதமரே கூறியபோது போகாத மானம், DMK Files வெளியானதும் போய்விட்டதா என்று. டி.ஆர். பாலு அவர்களின் மனசாட்சி கேள்வி கேட்பதால், அவரே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஆஜராவதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார் போலும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications