அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல.. கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது? தெளிவாக சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னை: பாஜக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு கூறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு பின் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்படும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை அதிமுகவை கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையிலான நெருக்கம் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது என்று தெரிவித்தார்.

அதிமுக - பாஜக நெருக்கம்
இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் திருமண விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கி சென்றார். இதனால் மீண்டும் சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்று பார்க்கப்பட்டது.
அண்ணாமலை சொன்னது என்ன?
இந்த நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
நத்தம் விஸ்வநாதன் பதிலடி
பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது என்று பேசியிருந்தார். அண்ணாமலை எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய போது, அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பாஜக கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கவில்லை என்று நேரடியாக பதிலடி கொடுத்தார்.
மகளிர் தின கொண்டாட்டம்
இதனால் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முதல் கையெழுத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டு தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலையின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறது என்று அதிமுகவை குறிப்பிட்டாரா.. தவறாக சொல்லாதீர்கள்.. 6 மாதங்களுக்கு பின் கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications