திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்.. என்கிற சபதத்தை முடித்துக்கொண்ட அண்ணாமலை!
சென்னை: திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் இன்று இந்த சபதத்தை முடித்துக்கொண்டு, காலில் செருப்பை அணிந்துள்ளார்.
பாஜகவின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலையிடம் சபதத்தை முடித்துக்கொள்ள கேட்க, அவரது வேண்டுகோளின்படி அண்ணாமலை சபதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தமிழக அரசை சரமாரியாக விமர்சித்திருந்தார். "தமிழக அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டது. இதை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, நாங்கள் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இந்த அரசின் பொறுப்பற்ற தனத்திற்கு எதிராக என்னை நானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறேன். திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றும் வரை நான் காலில் செருப்பு அணிய மாட்டேன். இது எனது சபதம்" என்று கடந்த டிசம்பர் 26ம் தேதி அறிவித்திருந்தார். அவர் சொன்ன மாதிரியே அடுத்த நாள் தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
செருப்பு அணியாமலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு பாஜகவினரால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. அண்ணாமலையும் நயினாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்போது நயினார் அண்ணாமலைக்கு செருப்பை கொடுத்து சபதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். எனவே, அண்ணாமலையும் செருப்பு அணிந்து விரதத்தை முடித்துக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மாநிலத் தலைவர் சொல்லிய பிறகு இன்னைக்கு அவர் வாங்கி கொடுத்த செருப்பை மேடையில் போட்டுக் கொண்டேன். நிச்சயமாக 2026 இல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நான் செருப்பு போடுவதை விட இந்த நம்பிக்கை எனக்கு இருப்பது மிக முக்கியமானது. இன்று பாஜகவின் புதிய புதிய தலைவராக எங்களது சட்டமன்ற குழு தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று இருக்கிறார். நிச்சயமாக கட்சியினுடைய வளர்ச்சி இன்னும்.
2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நிச்சயம் அமையும் என்கிற நம்பிக்கை நிச்சயம் எங்களுக்கு இருக்கிறது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். அண்ணன் நயினார் நாகேந்திரன் பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற பெரிய பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார். அது நடந்து கொண்டிருக்கிறது வருகிற காலத்தில் இன்னும் சிறப்பாக நடக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications