உனக்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா.. செய்தியாளரின் தோளில் தட்டி மிரட்டிய அண்ணாமலை.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. உங்களுக்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா என்று செய்தியாளர்களை பார்த்து கேட்ட அண்ணாமலை, அவரின் தோளில் கைகளால் தட்டி மிரட்டும் தொனியிலும் பேசியுள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக சார்பாக பாஜக சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மற்றும் இணை அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு அண்ணாமலை வந்த போது, செய்தியாளர் ஒருவர் மைக்கை நீட்டினார்.

அப்போது டென்ஷனான அண்ணாமலை, நான் எப்போது பேச வேண்டுமோ, அப்போது மட்டுமே பேசுவேன் என்று தெரிவித்தார். மீண்டும் கூட்ட அரங்கிற்குள் இருந்த செய்தியாளரை அழைத்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள மற்ற மீடியாக்களுடன் 4, 5 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன்.. புதுசா வந்து ஆட்டிட்டு இருக்கீங்களா.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள்..
நான் என்ன உங்கள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேனா.. எனக்காக ஊதியம் கொடுக்கிறீங்க.. உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களா? எனக்கு கொடுக்கிறார்களா? தமிழ்நாடு மீடியாக்களுடன் 4, 5 ஆண்டுகளாக அண்ணன், தம்பியாக எங்களுக்குள் பேசி பழகிக் கொண்டிருக்கிறோம்.. இனி வாழ்க்கை முழுவதும் உங்கள் நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்க மாட்டேன்.
மற்ற மீடியாவைவிட பெரிய ஆள் என்று சீன் போட வேண்டுமா? அங்கு நிற்பவர்கள் எல்லாம் பாவமா? உங்கள் நிறுவனத்திற்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா? நான் உங்களை மிரட்டவில்லை.. நீங்கள் தான் என்னை மிரட்டுகிறீர்கள்.. உனக்கு மாத சம்பளம் கொடுக்கிறார்கள்.. அதற்காக இந்த மிரட்டும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதே என்று செய்தியாளரின் கைகளில் பலமாக அடித்தார்..
தொடர்ந்து, நான் கேட்டேன்னா.. உன்னை வந்து பேட்டி எடுக்க சொன்னேனா.. நீ ஒரு நிறுவனத்திற்காக சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்கிறாய்.. நீ என்ன இலவசமாக பணி செய்கிறாயா என்று தோளில் தட்டி மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து அண்ணாமலை நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications