தமிழ்நாடு மக்களே துணை.. மோடி 3 வது முறை இந்திய பிரதமராக பதவியேற்பார் - அண்ணாமலை நம்பிக்கை
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க தமிழ்நாடு முழுவதும் நிச்சயம் துணை நிற்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
சங்கரன்கோயில் தொகுதியில் யாத்திரை மேற்கொண்ட அவர் பேசுகையில், "வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரளா மாநில எல்லைக்குள் செண்பகவல்லி அணை இருக்கிறது. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தென்காசி மாவட்டத்தில் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக செண்பகவல்லி அணை திகழ்ந்தது.

1962ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், 1982ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களும், அணையைப் பழுதுபார்க்க தமிழக அரசின் பங்கினை வழங்கினார்கள். ஆனால், கேரளா அரசு அன்று தொடங்கி இன்று வரை, இந்த அணையை சரிசெய்ய முன்வராமல் இழுத்தடித்து கொண்டு வருகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு, இந்த அணை பெரியார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது என்று கூறி இதற்கு மேல் இந்த அணையை இயக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக இது குறித்து ஒன்றுமே செய்யவில்லை. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனநீர் பிரச்சனைக்கு தீர்வு இந்த அணையை சரிசெய்தால் கிடைக்கும்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி 34 மாதங்கள் ஆகிவிட்டது. கேரளா கம்யூனிஸ்ட்களுடன் அன்பு பாராட்டும் முதல்வர் முக ஸ்டாலினால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக கம்யூனிஸ்ட் கட்சி இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாது. அதே போல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பேபி அணையை சரி செய்ய வேண்டும் என்றார்கள். இன்று வரை பேபி அணையும் சரிசெய்யப்படவில்லை.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற இரண்டு நவோதயா பள்ளிகள் - காமராஜர் பள்ளி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தாய்மொழிக் கல்வியோடு சேர்த்து, ஆங்கிலம், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மொழி விருப்பப் பாடங்கள் என ஐந்து மொழிகள் கற்கும் வாய்ப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்வித் திட்டம் உருவாக்கப்படும்.
இதுவரை அரசு வேலை பெறாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். இதை உறுதி செய்ய ஒரு தனி இடஒதுக்கீடு முறை உருவாக்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறப்பு, பனை பொருள்கள் ஊக்குவிக்கப்படும். காவல்துறைக்கு, 8 மணி நேர பணிநேரம் மற்றும், ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். அறம் இல்லாத இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும். மத்திய அரசு வழங்கும் விவசாய கௌரவ நிதி 6000 ரூபாயுடன், மாநில அரசின் பங்கு 9000 ரூபாய் என, 15,000 ரூபாய் விவசாயிகளுக்கு பாஜக வழங்கும்.
ஊழல், குடும்ப, அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திராவிட அரசியலில் இருந்து மக்கள் விடுதலை எதிர்பார்க்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டம், வரும் பாராளுமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை, தமிழகம் முழுவதும் நிச்சயம் துணை நிற்கும். தமிழகத்தில் உருவாகவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கான விதையாக இந்தத் தேர்தல் அமையும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications