கோவை, திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த அண்ணாமலை
சென்னை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை மற்றும் திருப்பூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த 13 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் மூலம் சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறி கூலி விகிதத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இருப்பினும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சுமார் 2.5 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட கூலி முறையாக வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 2022 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வு இதுவரை அமல்படுத்தப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மின் கட்டண உயர்வு, வாடகை அதிகரிப்பு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
கடந்த 15 மாதங்களாக கூலி உயர்வை வலியுறுத்தி பத்து முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. இதன் விளைவாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அடுத்த 13 நாட்களில் நாளொன்றுக்கு 30 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 390 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தற்போது 50,000 விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications