“பாவம்.. அம்னீஷியா”.. யார் என்றே தெரியாது எனச் சொன்ன அண்ணாமலையை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்!
சென்னை: எஸ்.வி.சேகர் யாரென்றே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், "பாவம் அம்னீஷியா" என கிண்டல் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 25 எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்புவோம் என சூளுரைத்து வந்த அண்ணாமலையும் கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அண்ணாமலை மீது விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே அண்ணாமலையை எஸ்.வி.சேகர் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தற்போது அதிகமாகவே சீண்டி வருகிறார்.
"அண்ணாமலை கஷ்டம் அவரால் வந்தது. கடப்பாரையை எடுத்து அவரே குத்திக்கொண்டார். அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார். அவர் தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அதில் 13 இடங்களில் டெபாசிட் போய்விட்டது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தான்.
இதுகுறித்து 6 மாதங்கள் முன்பே நான் கூறினேன். தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம் தான் என்று. அது இப்போது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் மோடி 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்றேன், அதுவும் நடந்திருக்கிறது.
தமிழக பாஜக, எப்போது அண்ணாமலையின் யோசனையைக் கேட்டு அதிமுகவின் கூட்டணியை முறித்துக்கொண்டதோ, அன்றே தமிழக பாஜகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இரண்டு முறை இந்தியாவை ஆண்ட தேசிய கட்சிக்கு தன்னால் ஒரு சீட் கொடுக்கக் கூட உபயோகம் இல்லாமல் மாநில தலைவர் உள்ளார் என்றால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை, அசிங்கம். 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை. 14 சதவிகிதம் என்பது பாஜக கூட்டணியால் வந்த வாக்குதான். எனவே தோல்வியை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இதை சரி செய்தால் தான் திருந்த வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள், எஸ்.வி.சேகர், அண்ணாமலை குறித்து கூறியுள்ள கருத்துக்கள் குறித்து கேட்டபோது, அவர் யார் என்று எனக்குத் தெரியாது என அண்ணாமலை பதில் அளித்தார்.

இந்நிலையில், அண்ணாமலை உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.வி.சேகர், "எங்க வீட்டுக்கு வந்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு எனக்கு போட்ட துண்டை திரும்ப போட்டு எடுத்த செல்பி. பாவம் அம்னீஷியா." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications