அண்ணாமலை பொய்யர்.. அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. காயத்ரி "அட்டாக்".. பாஜகவில் இருந்து விலகல்
சென்னை: பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் தனது போஸ்டில் தெரிவித்துள்ளார்..
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. கட்சியில் சீனியர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாகவும், அண்ணாமலை வந்த பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் விமர்சனம் வைத்து வந்தார். அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் கடுமையான புகார்களை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம் வைத்து இருக்கிறார்.
காயத்ரி ரகுராம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல சீனியர்கள் அமைதியாக புழுங்கிக்கொண்டு இருந்த நிலையில் காயத்ரிதான் இதில் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார்.

என்ன சொன்னார்?
இதனால் காயத்ரிக்கும் அண்ணாமலைக்கு இடையில் நேரடியாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்தும் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். கட்சிக்குள் மோனோபோலி இருப்பதாக.. அதாவது ஒரே ஒரு தலைவர் மட்டும் கட்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவதாக காயத்ரி புகார் வைத்து வருகிறார். மேலும் அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் எங்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான பர்சனல் அட்டாக் மேற்கொள்ளப்படுகிறது. வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடக்கிறது. தமிழ்நாடு போலீஸ் இதை பற்றி விசாரிக்க வேண்டும். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் வைக்கிறார்கள், என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு உள்ளார்.

வெளியேற்றம்
இந்த நிலையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் தனது போஸ்டில் தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், என்னுடைய கருத்தை சொல்ல, பிரச்னையை விசாரணை செய்ய, சம உரிமை வழங்க, பெண்களுக்கு மரியாதை வழங்க கூட முடியாத பாஜகவில் இருந்து விலகுகிறேன். அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் கட்சியில் இருந்து கிண்டல் செய்யப்படுவதற்கு கட்சியில் இல்லாமல் கிண்டல் செய்யப்படுவது மேல்.

பாஜக
கட்சி தொண்டர்கள் பற்றி யாருமே இங்கு கவலைப்படவில்லை. அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடி ஸ்பெஷல் மனிதர். அவர் இந்த தேசத்தின் தந்தை. அவர் எப்போதும் என்னுடைய விஸ்வகுருவாக இருப்பார். தலை சிறந்த தலைவராக இருப்பார். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

அண்ணாமலை பொய்யர்
கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டாரக்ள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

விலகல்
உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் அங்கே நீங்கள் இருக்க கூடாது. உங்களை நீங்கள் நம்புங்கள். வீடியோ, ஆடியோ அனைத்தையும் வெளியிடும்படி நான் போலீசில் புகார் அளிக்க உள்ளேன். அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த சொல்ல இருக்கிறேன். அவர் மோசமான நபர். எனக்கு எதிராக டிரெண்ட் செய்யும் வார் ரூம் பற்றியும் புகார் கொடுப்பேன், என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications