டெல்லியில் அண்ணாமலை.. அமித்ஷா, ஜேபி நட்டாவுடன் சந்திப்பு.. பேசப்பட்டது என்ன?
சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்றே டெல்லி சென்றார்.

பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், தனித்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. மேலும் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்றும், கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும் அக்கட்சி அழைப்பு விடுத்து இருந்தது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தலைமையிலான கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது அதிமுகவை பாஜக கூட்டணியில் அழைப்பதற்கு தான் இப்படி அவர் பேசியிருக்கிறார் என்ற கருத்து பரவியது.
இது தொடர்பாக டெல்லி சென்ற அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், " அதிமுக என குறிப்பிட்டு அமித்ஷா அழைப்பு விடுக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியை தொடங்கியதே பாஜகதான். எனவே அந்த கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கூட இணையலாம் என்று கூறினார்.
இந்தநிலையில், இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், வரும் 11 ஆம் தேதி ஜேபி நட்டா தமிழகம் வருவது குறித்தும் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications