பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை கொடுத்த உறுதி! பாஜக கூட்டணியில் தேமுதிக? சட்டென மாறும் அரசியல்!
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னிடம் வைத்த முக்கிய கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தருவதாக உறுதி கொடுத்திருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அண்ணாமலையை கடந்த வாரம் தாம் தொடர்பு கொண்டு பேசியதையும், தாம் வைத்த கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற்றுத் தருவதாக அவர் கூறியதையும் இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்தே மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

எண்ணூர் கிரீக் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள், கால்நடைகள், விலங்குகள், உயிர்ச்சூழல் என அனைத்தும் கடுமையாக பாதிப்பைச் சந்தித்துள்ளன. மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பாழானதாலும், முகத்துவாரப்பகுதியில் எண்ணெய் கழிவு மிதப்பதாலும், மீனவர்களால் கடலுக்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த், மீனவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், கடந்த வாரம் அண்ணாமலையையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனையும் எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது சி.பி.சி.எல். நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உரிய கேபினட் அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததாகவும் கூறியுள்ளார்.
நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தனக்கு உறுதி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்க மிக அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வருகிறது. மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதில் கூட லாஜிக் உள்ளது, ஆனால் தன்னை போல ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவரிடம் கோரிக்கை வைத்தேன் என பிரேமலதா கூறியதிலிருந்து அவர் எந்த திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications