காவல்துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.. வெறும் மன்னிப்பு மட்டும் போதுமா? அண்ணாமலை கேள்வி
சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர் நவீன் பொல்லினேனி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமலா பால் நிறுவனத்தில் 3 ஆண்டாக பணியாற்றிய நவீன் ரூ.44.5 கோடி கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகாரளித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அண்ணாமலை சந்தேகம்
இந்த நிலையில் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த திரு. நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாண்டியராஜன் விடுமுறையில் சென்றது ஏன்?
கடந்த மாதம் 27ஆம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளதா?
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை.
மன்னிப்பு மட்டும் போதுமா?
தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
நியாயமான விசாரணை தேவை
உடனடியாக, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications