சாட்டை அடி போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை! அண்ணா பல்கலை. விவகாரம்! செருப்பு போட மாட்டேன் எனவும் சபதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து அண்ணாமலை செய்தியாளரைச் சந்தித்தார். நாளை காலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள அண்ணாமலை, மேலும் 48 நாட்கள் விரதம் இருக்க போவதாக அறிவித்த அண்ணாமலை, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பும் அணிய மாட்டேன் என்றும் கூறி காலணியை அக்ற்றினார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து அண்ணாமலை செய்தியாளரைச் சந்தித்தார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இனி காலணி அணிய மாட்டேன் என்று அவர் சூளுரைத்தார்.
அண்ணாமலை பேட்டி:
மேலும், அடுத்த 48 நாட்களுக்கு விரதம் இருக்கப் போகிறேன் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, நாளை எனது இல்லத்திற்கு முன்பாக என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன் என்றும் பாஜகவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் நின்று நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் அண்ணாமலை முன்பு சொன்னது போலவே தனது காலணியைக் கழட்டினார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணி மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
கோவை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "சில நேரத்தில் எதற்காக அரசியலில் இருக்கிறோம்.. எதற்காக அரசியலில் தொடர வேண்டும் என யோசிக்கும் அளவுக்குக் கொடூரங்கள் நடக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடூரமான சித்திரவதை சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.
திமுகவை சேர்ந்தவன்தான்:
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திமுகவில் வட்ட பொறுப்பில் இருப்பவர் தான்.. அவர் அமைச்சர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கிறார். திமுக அமைச்சர்கள் அவர் கட்சி பொறுப்பாளர் இல்லை என்கின்றனர். ஆனால், முரசொலியில் அவரது பெயர் வந்து இருக்கிறது. கட்சி பொறுப்பில் இல்லாதவர் பெயர் எப்படி முரசொலியில் வரும்? குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பது விஷமில்லை.. குற்றம் செய்ய திமுகக்காரன் என்ற போர்வை தேவைப்படுகின்றது.
மேலும், இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் எப்படி லீக் ஆனது.. போலீசார் விவரம் தெரியாமல் இந்த விவகாரம் லீக் ஆக முடியாது. இதெல்லாம் ஒரு எஃப்ஐஆரா.. வெட்கமாக இல்லையா உங்களுக்கு.. பாதிக்கப்பட்ட பெண் பெயர் , மொபைல் எண், அப்பா பெயர்னு எல்லாம் இருக்கு.. நீங்கெல்லாம் மனுசனுகளா? அமைச்சர்கள் இதற்கு வெட்கப்பட வேண்டும்.
48 நாட்கள் விரதம்:
எஃப்ஐஆரை படித்தாலே கோபம் வருது.. எவ்வளவு தான் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும். இதற்காகப் போராட்டம் நடத்திய முன்னாள் ஆளுநரை கைது செய்து இருக்காங்க.. இனிமேல் ஆர்ப்பாட்டம் செய்யும் வேலை எல்லாம் கிடையாது. நாளை காலை பாஜகக்காரன் ஒவ்வொரு நபரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
எனக்கு நானே சாட்டையில் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நாளை நடத்தவுள்ளேன்.. நாளை காலை 10 மணிக்குக் கோவையில் உள்ள என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையில் அடித்துக் கொள்ளப் போகிறேன். மேலும், திமுக ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன்.. நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து ஆறுபடை முருகனிடம் முறையிடப் போகின்றேன்
சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம்:
நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்துக் கொள்வேன். தொண்டர்களை இதுபோல செய்யச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டு வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினால் போதும்.. மக்கள் இதைப் பேச வேண்டும். நமது வீட்டில் ஒரு பெண்ணுக்கு இது நடந்தால் நாம் அமைதியாக இருப்போமா.. எஃப்ஐஆர் லீக் ஆன விவகாரத்தில் கமிஷ்னர் பதவி விலக வேண்டும். குறைந்தது துணை கமிஷ்னர் பதவி விலக வேண்டும்..
செருப்பையும் கழற்றினார்:
போலீசார் பயன்படுத்தும் சிசிடிஎன்ஸ் நெட்வோர்க்கில் இருந்து எப்படி எஃப்ஐஆர் எப்படி வெளியே லீக் ஆனது. பெண் சரியில்லாத நபர் என்பதைக் காட்ட இதைச் செய்துள்ளனரா? கை,கால் உடைப்பு எல்லாம் ஒரு தண்டனையா? நியாயமான அரசாக இருந்தால் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து.. தண்டனைப் பெற்றுத்தரட்டும்" என்றார். மேலும், செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடனேயே அவர் அனைவரது முன்னிலையில் தான் அணிந்திருந்த செருப்பையும் கழற்றினார்.












Click it and Unblock the Notifications