ஒரு போன் காலில் முடிய வேண்டிய பிரச்சனை.. எடப்பாடியை சீண்டிய அண்ணாமலை.. ஏன் அப்படி சொன்னாரு?
அண்ணாமலை நினைத்து இருந்தால் பிரச்னையை முடித்து இருக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: அண்ணாமலை தலைக்கனத்தோடு பேசுகிறார்.. அவர் தன்னம்பிக்கையாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு தவறாக பேசுகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து பலர் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கூட காட்டமாக பதில் அளித்து இருந்தார்.
அதில், பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக - பாஜக மோதல் ஒரு போன் காலில் முடிந்து இருக்கும். அண்ணாமலை எடப்பாடிக்கு போன் செய்து பேசி இருக்க வேண்டும். என்னை திட்டிவிட்டு நிர்மல் குமார் வந்துள்ளார். அவரை சேர்த்துக்கொண்டீர்கள். இனி புதிதாக சேர்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பேசி இருக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை என்ன செய்தார்.. கடுமையாக விமர்சனம் செய்தார். அமர் பிரசாத் ரெட்டியை விட்டு விமர்சனம் செய்ய சொல்கிறார். எடப்பாடியை 420 என்று அமர் பிரசாத் ரெட்டி கூறுகிறார். நாங்கள் வாழ்க்கை கொடுத்தோம் என்றெல்லாம் கூறுகிறார். அவர் பேசுவது எல்லாம் சரியானதா?
என்ன சொன்னார்?

போன் கால்
2006ல் ராமதாஸ் திமுக கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலில் நிற்கிறார்கள். தேர்தலுக்கு பின் ராமதாஸ் பச்சை துரோகம் என்று கருணாநிதியை விமர்சனம் செய்தார். அதற்கு திமுக மிகவும் நாகரீகமாக பதில் சொன்னது. இப்போது பாஜக சொல்வது போல திமுக செய்யவில்லை. கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் அந்த எண்ணம் இருக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை பேசுவதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. அண்ணாமலை ஏன் இப்படி கடிந்து பேச வேண்டும்.

நிர்மல் குமார்
நிர்மல் குமாரை பத்திரிகையாளர்களுக்கு வேண்டுமானால் தெரியலாம். ஆனால் மக்களுக்கு அவரை தெரியாது. அவர் அதிமுகவில் சேர்ந்த பின்தான் பிரபலம் ஆகிஉள்ளார். அண்ணாமலையை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட பின்தான் பிரபலம் ஆனார். அவர் போனதற்கு அண்ணாமலை ஏன் இப்படி விமர்சனம் செய்கிறார். அதிலும் தன்னை தலைவர் என்கிறார். திராவிட கட்சிகளின் தலைவர் பெயர்களை சொல்லி சொல்கிறார். ஏன் பாஜகவில் தலைவர்கள் இல்லையா? தேசிய அளவில் பாஜகவில் கருணாநிதி, ஜெயலலிதா போல தலைவர் இல்லையா? அண்ணாமலை என்ன பேசுகிறார்?

எதிர்வினை
அண்ணாமலை நினைத்து இருந்தால் பிரச்னையை முடித்து இருக்கலாம். ஆனால் அவர் மேலும் நிர்வாகிகளை சேர்த்து எடப்பாடியை சீண்டுகிறார். தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்திற்கு நூல் அளவுதான் வித்தியாசம். அண்ணாமலை தலைக்கனத்தோடு பேசுகிறார். ஜெயலலிதா பெரிய தலைவராக இருந்தாலும் கூட்டணி வைப்பதற்காக பாமக அலுவலகம் சென்றார், திருமாவை நேரில் போய் பார்த்தேன். எப்போது எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அண்ணாமலை எதோ தான் எளிதாக 5வது கியர் போட்டுவிடுவேன் என்று கூறுகிறார். அவரால் கூட யாரும் இல்லாமல் எப்படி செய்வார்.

யாரும்
இருக்கிற எல்லோரையும் வெளியே அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவர் தொண்டர்கள் யாரும் இல்லாமல் எப்படி கட்சியை வெற்றிபெற வைப்பார். தான்தான் எல்லாம்.. நான்தான் முடிவு எடுப்பேன் என்று சொல்கிறார். டெல்லி சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அவர் சொன்னால் என்ன அர்த்தம் அதற்கு. இதற்கு பெயர் தன்னம்பிக்கையா தலைக்கனமா? சொல்லுங்கள். இரண்டிற்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம். அதை அண்ணாமலை தாண்டி விட்டார். அண்ணாமலைக்கு எப்போது, என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை, என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications