நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசித் திரியக்கூடாது.. கோபப்பட்ட சசிகலா!
சென்னை: ஏதோ வந்தோம் பேசுகிறோம் என்று அரசியல் செய்யக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்துள்ளார் சசிகலா. அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றி பேசியது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அண்ணாமலை பேச்சை கண்டித்துள்ளார் சசிகலா.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் இடையே அவ்வப்போது பெரிய அளவில் உரசல் ஏற்பட்டு வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போதிலும் அதிமுக தலைவர்களை அவ்வப்போது சீண்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அண்ணாமலை. சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று அண்ணாமலை கூறினார். இது அதிமுகவினரை கொந்தளிக்கச் செய்தது. பின்னர், டெல்லி பாஜக தலைமை இந்தப் பிரச்சனையை சுமுகமாக்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை பேசியுள்ளது திமுக, அதிமுக இரு கட்சியினரையும் கொதிக்க வைத்துள்ளது. குறிப்பாக, அண்ணாவை தம் கட்சியின் பெயரிலேயே வைத்திருக்கும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அண்ணாவை அண்ணாமலை விமர்சித்ததால், அதிமுக தலைவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், பின்னர் முத்துராமலிங்க தேவர் ஆவேசம் அடைந்து எச்சரிக்கை விடுத்ததால் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து அண்ணா ஓடி வந்ததாகவும் கூறினார். இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "பேரறிஞர் அண்ணா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நேற்று வரை ஒரு வேலையில் இருந்து விட்டு இன்று அரசியலுக்கு வந்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. அரசியலை சிலர் விளையாட்டுத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனுபவங்களால் அரசியலில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதை விட்டுவிட்டு ஏதோ வந்தோம் பேசுகிறோம் என்று அரசியல் செய்யக்கூடாது." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சனாதன விவகாரத்தில் எந்த சர்ச்சைக்கும் வேலை இல்லை. எந்த தெய்வமும் யாரையும் பிரித்து வைக்கவில்லை. சனாதன பிரச்சனையை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனையின் மீது கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பிரச்சனையை திமுக அரசியல் தூண்டிவிடுகிறது என்பதைப் போலத்தான் இதை நான் பார்க்கிறேன். காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தில் நமது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications